1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By சினோஜ் கியான்
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2019 (19:21 IST)

எங்களின் கடவுளே .. சிறையில் வாடும் சிதம்பரத்தை வாழ்த்தி போஸ்டர் ...அமர்களப்படுத்திய தொண்டர்கள்

தேசத்தலைவர்கள் மற்றும்  அரசியல்வாதிகளில் செல்வாக்குடன் பிறந்தவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். முன்னாள் பாரத பிரதமர் நேருவை சில்வர் ஸ்பூனுடன் பிறந்த செல்வச்சீமான் என்றே அழைத்தனர். அதற்கடுத்து, தமிழகத்தில் கொடைவள்ளலாகவும், கல்வி வள்ளலாகவும் பிரபலமாக அறியப்பட்டவர் சர். அண்ணாமலை செட்டியார். அவரது பேரன்தான் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம்.
 

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் முறைகேடாக பணம் பெற்றதாக  ப. சிதம்பரம் குற்றம்சாட்டப்பட்டு, இன்று,  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்களை அரசியல்வாதிகள் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த  ப. சிதம்பரத்திற்கு இன்று வந்துள்ள நிலைமை நாட்டில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில்தான், அவர் மீது இந்த மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறினாலும் கூட, சிபிஐ, நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த  விவகாரத்தில் பல அதிரடி முக்கிய விசாரணைகளை நடத்திவருகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதனடிப்படையில் பார்த்தால், நீதித்துறையினர் மீது யாரும் களங்கம்கற்பிக்க முடியாது ; காரணம், ப. சிதம்பரம் அமைச்சராக பதவிவகித்த வந்த காலத்தில்தான், இந்த முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் அவர் மீது இந்த வழக்கைப் பதிந்து, நீதிமன்றத்தில் தக்க ஆதரங்களை சமர்பித்துள்ளனர்.

எனவே, ஆதாரமில்லாமல், அமலாக்கத்துறையினர் மற்றும் சிபியை இந்த வழக்கை  கையில் எடுத்து சிதம்பரத்தை குற்றம்சாட்ட வேண்டிய தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை என்றே  அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

இந்த நிலையில், ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனத்தை,  ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஆலோசகராக நியமித்து அதன் வழியாக பல கோடி ரூபாய்   பரிமாற்றம் நடந்ததாக , அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி சிபிஐயிடம் கூறியுள்ளதாக செய்திகளில் படித்தோம்!  ஆனால் தான் இந்திராணி முகர்ஜியை பார்த்ததேயில்லை, அவர் யார் என்றே தெரியாது என கார்த்திக் சிதம்பரம் கூறிவருவதுதான் வேடிக்கையாக உள்ளது. இதற்கான ஆதாரத்தை சிபிஐ போலீஸார் சல்லடை போட்டு தேடிவருகிறார்கள்.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிதம்பரத்தின் மீதான தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் அதுவரைக்கும் இந்த வழக்கு குறித்த மர்மங்கள் தெளிவில்லாத வகையிலேயே ஊடகங்களால் மக்களுக்கு செய்திகளாகக் கற்பிக்கப்படுகிறது எனக் கொள்ளலாம்.

இதிலும், சில நாட்களுக்கு முன்னர் சிதம்பரம், தன் குடும்பத்தின் சார்பில் ஒரு டுவிட் பதிவு செய்திருந்தார். அதில் ’அதிகாரிகளை விட்டு, தன்னை ஏன் கைது செய்தார்கள் என மக்கள் தன்னிடம் கேள்வி எழுப்பிவருவதாக ’ அவர் அதில் பதிவிட்டிருந்தார்.

இதனடிப்படையில் பார்த்தால், அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களையும், அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் ஒருசேர விசாரணை வளையத்திற்கும் கொண்டுவந்து விசாரித்திருக்க வேண்டும் எனவும் பலரும் கூறிவருகிறார்கள்.

சிதம்பரம் இப்படி புதிர் போட்டதற்கு பின்னர் என்ன மர்மம் இருக்கப் போகிறது என்ற கேள்வியும் ஒரு புறம் எழுகிறது. எனவே சிபிஐ போலீஸார் தற்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தையும், இனிமேல் மேற்கொள்ள உள்ள சிதம்பரத்தின் உதவியாளர்கள் மற்றும் அப்போதைய அதிகாரிகளிடம் மேற்கொள்ளவுள்ள  விசாரணையைப் பொறுத்தே இந்த வழக்கின் பாதை செல்லும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இந்த வழக்கில் கார்த்திக் சிதம்பரம் மற்றும் ப. சிதம்பரம் இத்தனை ஆண்டுகாலம் கோர்ட்டில் வாய்தாவுக்கு மேல் வாய்தா மற்றும் முன் ஜாமீன் பெற்று ஒரு தேர்ந்த வழக்கறிஞர் என்பதையும் அவர் நிரூபித்துவிட்டார். அவர்கள் மீது எந்தத் தவறுமில்லை என்றால் அவர் சிபிஐ முன் தைரியமாக ஆஜராகி இருக்கவேண்டியது தானே என்பன போன்ற விமர்சனங்களும் சிதம்பரத்தின் முன் வைக்கப்படுகிறது. அவர் இதில் அலட்சியம் காட்டப்போய்தான், அவரை சிபிஐ போலீஸார் நள்ளிரவில் கைது செய்யவேண்டிய இக்கட்டுக்கு அவர் தள்ளப்பட்டார். இந்த வழக்கு செல்லும்  போக்கின் திசையை அறிந்த அவர்,  இந்திராணி முகர்ஜியின் வாக்கு மூலம் தான் இன்று அவரது சிறையில் தள்ளியதற்கான முக்கியக் காரணம் என்பதை சிதம்பரம் அறியாமல் இருக்கமாட்டார்.
 

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் , ப. சிதம்பரம் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகிய இருவருக்கும் இடையே என்ன உரையாடல்  உள்பட பல மர்ம முடிச்சுகள் என்ன நடந்தது என்பது பற்றி அறிந்துகொள்ள நாடே காத்துக்கொண்டுள்ளது. அதை நீதிமன்றம்தான் வெளிக்கொண்ட முடியும்! அதுதான் இந்த வழக்கின் உயிர்நாடியும் கூட !

இந்த நிலையில் இன்று திகார் சிறையில், தனது 74 வது பிறந்த நாள் கொண்டாடும் ப.சிதம்பரத்துக்கு அவரது ஆதரவாளர்கள், பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து அவரது பிறந்த நாளை கொண்டாடிவருகின்றனர். அதில், கல்விக் கடன் வழங்கியும், பயங்கரவாதத்திலிருந்து பாரதத்தை காத்திடும் எங்களின் கடவுளே ! வாழ்க பல்லாண்டு என எழுதப்பட்ட வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
 

நிச்சயமாக இந்த வார்த்தைகள் சிதம்பரத்தின் காதுகளில் கேட்டால் மன நிம்மதி கிடைக்கும் . பல வங்கிகள் மாணவர்கள் படிப்பதற்கு கடன் தராமல் இழுத்தடித்து வந்த காலத்தில், ஏழை மாணவர்கள் சிரமப்பட்டனர். அந்த சமயத்தில், சிதம்பரம் அமைச்சராக இருந்த போது, அனைத்து மேல்படிப்பு படிக்கின்ற மாணவர்களுக்கும் கல்வி கடன்  வழங்கவும் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய கடன் கிடைக்கவும் ஆணைகள் பிறப்பித்து வழிவகை செய்தார். இது மாணவர்களின் கல்விப் புரட்சியாகவே அந்தக் காலகட்டத்தில் பார்க்கப்பட்டது என்பதை நம்மால் மறுக்க முடியாது. இந்த நிலையில் இன்று சிறையில்  பிறந்தநாள் கொண்டாடியுள்ள இந்திய அரசியலின் மூத்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரின் அரசியல் இமேஜ் இனிவரும் காலங்களில் இந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் அளிக்கவுள்ள தீர்ப்பை பொறுத்தே அமையும் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.