சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. காங்கிரஸ் தீர்மான நோட்டீஸ்..!
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளது.
காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், சுமார் 119 எம்பிக்களின் கையொப்பங்களுடன் இந்த நோட்டீஸை மக்களவை பொதுச்செயலாளரிடம் சமர்ப்பித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், சபையில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய எம்பி மாணிக்கம் தாகூர், அரசியலமைப்பு மாண்பு மற்றும் சபாநாயகர் மீது தனிப்பட்ட மரியாதை இருந்தாலும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்ப தொடர்ந்து முட்டுக்கட்டை போடப்படுவதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.
மறுபுறம், கடந்த பிப்ரவரி 4-ம் தேதி அவையில் ரகளையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பெண் எம்பிக்கள் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
எதிர்க்கட்சியினர் சபாநாயகர் மேசை மீது ஏறி அமளியில் ஈடுபட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நிலவும் இந்த மோதல் போக்கு, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva