பொது இடங்களில் தொழுகை, குர்பானிக்கு தடை: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு!
வரும் மே 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு பல கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும் இந்த 10 முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் உத்தரவின்படி, பக்ரீத் பண்டிகைக்கான சிறப்புத் தொழுகைகள் மசூதி வளாகங்களுக்குள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்; எக்காரணம் கொண்டும் சாலைகளிலோ அல்லது பொது இடங்களிலோ தொழுகை நடத்தக் கூடாது.
கூட்ட நெரிசலை தவிர்க்கத் தேவைப்பட்டால் தகுந்த இடைவெளிகளில் சுழற்சி முறையில் தொழுகையை நடத்திக் கொள்ளலாம் என்றும், சாலைப் போக்குவரத்திற்கு எவ்வித முடக்கமும் ஏற்படக் கூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், பொது இடங்களில் ஆடுகளை குர்பானி கொடுக்கக் கூடாது என்றும், தடை செய்யப்பட்ட விலங்குகளை பலியிடக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
குர்பானி கொடுத்த பிறகு அங்கு அசுத்தமான சூழல் உருவாகாமல் தூய்மையை பராமரிக்கவும், உணர்ச்சிகளை தூண்டும் சமூக விரோதிகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பதற்றமான பகுதிகளில் சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்தவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
Edited by Siva
