தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு.. 2029 தேர்தல் முதல் அமல்படுத்தப்படும்: பிரதமர் மோடி
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது "காலத்தின் கட்டாயம்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள திருத்த மசோதா, 2029 மக்களவை தேர்தலில் இந்த இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "பெண்கள் இடஒதுக்கீடு நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்புமிக்கதாகவும், உள்ளடக்கியதாகவும் மாற்றும். இதனை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் துரதிர்ஷ்டவசமானது," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் மக்கள்தொகையில் பாதியாக இருக்கும் பெண்கள், அறிவியல் முதல் விளையாட்டு வரை அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த செப்டம்பர் 2023-இல் 'நாரி சக்தி வந்தன் அதினியம்' நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது தனது வாழ்வின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று என்றும் அவர் கூறினார்.
வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்த இடஒதுக்கீடு தொடர்பான திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த மசோதா, தற்போது நடைமுறைக்கு வருவதற்கான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்பதே பிரதமரின் கருத்தாகும்.
Edited by Siva