உள்ளாடையில் 1 கிலோ தங்கத்தை கடத்திய இளம்பெண்.. சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியதால் பரபரப்பு..!
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், உள்ளாடைக்குள் மறைத்து தங்க கட்டிகளைக் கடத்தி வர முயன்ற மியான்மர் நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மியான்மரின் யாங்கூன் நகரில் இருந்து டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் வந்திறங்கிய பெண் பயணி ஒருவர், சுங்க வரி செலுத்த தேவையில்லாத வழியை பயன்படுத்தி சென்றபோது, அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக அந்த பயணியை மறித்த சுங்க அதிகாரிகள், தனியிடத்துக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். இதில், அவர் தனது உள்ளாடைக்குள் 6 தங்க கட்டிகளை தனித்தனியாக மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
அதிகாரிகள் கைப்பற்றிய அந்த தங்கக் கட்டிகளின் மொத்த எடை 997.5 கிராம் ஆகும். இவற்றின் மதிப்பு குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. சுங்க இலாகா அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த தங்கக் கடத்தல் தொடர்பாக அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் யாருடைய உத்தரவின் பேரில் கடத்தி வந்தார், இந்த கடத்தல் கும்பலுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Edited by Siva