குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?
குருநானக் தேவ் பிரகாஷ் பர்வ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய யாத்ரீகர்கள் குழுவிலிருந்து பஞ்சாபை சேர்ந்த சரப்ஜித் கவுர் என்ற 52 வயது பெண்மணி மாயம் ஆகியுள்ளார். நவம்பர் 4ஆம் தேதி சென்ற அவர், நவம்பர் 13 அன்று இந்தியா திரும்பிய 1,992 பேர் கொண்ட குழுவில் இல்லை.
இந்த சூழலில், அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி, தனது பெயரை 'நூர்' என்று மாற்றிக்கொண்டு, ஷேகுபுராவை சேர்ந்த நசீர் ஹுசைன் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் உருது நிக்காஹ்நாமா ஆவணம் வெளியாகியுள்ளது. எனினும், இதன் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. கவுர் ஏற்கெனவே விவாகரத்து பெற்றவர், அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
அவர் இந்தியா திரும்ப தவறியதையடுத்து, அவரது பெயர் குடியேற்ற பதிவுகளில் இல்லாததை கண்டறிந்த அதிகாரிகள், பஞ்சாப் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்தியத் தூதரகம் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. மேலும், காவல்துறையும் பிற இந்திய அமைப்புகளுக்கு முதற்கட்ட அறிக்கையை அனுப்பியுள்ளது.
Edited by Mahendran