1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2019 (15:29 IST)

”ஹைதராபாத் போலீஸ் போல் உத்வேகமாக செயல்பட வேண்டும்”.. முன்னாள் முதல்வர் அறிவுரை

தெலுங்கானா பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி “ஹைதராபாத் போலீஸ் போல் உத்வேகமாக செயல்பட வேண்டும்” என உத்தர பிரதேசம், டெல்லி போலீஸாருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் பெண் மருத்துவரை கொலை செய்த 4 பேரை போலீஸார் இன்று காலை சுட்டுக்கொன்றுள்ளது.

அதாவது 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்த முயன்றபோது தப்பி ஓட முயன்றதாகவும், ஆதலால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் எனவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து பல பெண் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி, ”பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி போலீஸார் ஹைதராபாத் போலீஸ் போல உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்” என அறிவுரை வழங்கியுள்ளார்.

”ஆனால் துர்திஷ்டவசமாக உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகள் மாநில விருந்தாளிகளாக நடத்தப்படுகிறார்கள்” எனவும் மாயாவது குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.