பள்ளி மாணவர்களை தொழுகை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் மாணவர்களை கட்டாயப்படுத்தித் தொழுகை செய்ய சொன்னதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களை தொழுகை செய்ய வற்புறுத்துவதாகவும், பள்ளியில் முறையாக தேசிய கீதம் கூட பாடப்படுவதில்லை என்றும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து அவர்கள் அப்பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரிடம் புகார் அளித்தனர். இந்த தகவல் பரவியதும், பள்ளிக்கு வெளியே திரண்ட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
இந்த புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, கல்வித் துறை சார்பில் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டது. தொடக்கக் கல்வி அதிகாரி இது குறித்துப் பேசுகையில், "விசாரணைக் குழுவின் அறிக்கை வரும் வரை அந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பள்ளிகளில் மதச்சார்பற்ற கல்விச்சூழல் நிலவுவது உறுதி செய்யப்படும்," என்று தெரிவித்துள்ளார்.
Edited by Siva