20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!
உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில், மணமகன் வீட்டை அடைந்த 20 நிமிடங்களில் ஒரு திருமணம் முறிந்துபோனது.
விஷால் மதேஷியாவுக்கும் பூஜாவுக்கும் நவம்பர் 25ஆம் தேதி திருமணம் நடந்தது. மணமகள் பூஜா, புதிய அறைக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே வெளியே வந்து, "நான் என் கணவருடன் வாழ விரும்பவில்லை" என்று அறிவித்து, பெற்றோருடன் திரும்புவதில் உறுதியாக இருந்தார். திடீர் முடிவுக்கு அவர் எந்த காரணத்தையும் கூறவில்லை.
மணமகன் குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் சமாதானப்படுத்த முயன்றும், பூஜா பிடிவாதமாக இருந்ததால், நவம்பர் 26ஆம் தேதி கிராமத்தில் பஞ்சாயத்துக் கூட்டம் கூட்டப்பட்டது. சுமார் ஐந்து மணி நேர விவாதத்திற்கு பிறகு, எந்தத் தீர்வும் எட்டப்படாததால், பஞ்சாயத்தார் தம்பதியை பிரித்து விடும்படி ஆலோசனை வழங்கினர்.
இரு குடும்பத்தினரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக எழுத்துபூர்வ ஒப்பந்தம் செய்தனர். திருமண பரிமாற்றங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டு, பூஜா தனது பெற்றோர் வீட்டுக்கு திரும்பினார்.
Edited by Mahendran