கள்ள மார்க்கெட்டில் 1,500 முதல் 2,800 ரூபாய் வரை சிலிண்டர் விற்பனை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தட்டுப்பாடு இல்லை என்று உறுதி அளித்தாலும், கிராமங்கள் மற்றும் சில நகரங்களில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், 57 சதவீத நுகர்வோர் சிலிண்டர் பெறுவதில் தாமதத்தையும், கறுப்பு சந்தை விற்பனையையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, டெல்லி போன்ற நகரங்களில் 900 ரூபாய் மதிப்புள்ள சிலிண்டர், கறுப்புச்சந்தையில் 1,500 முதல் 2,800 ரூபாய் வரை விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 53 சதவீதத்தினர் விநியோக தட்டுப்பாடு இருப்பதாக டீலர்கள் கூறியதாக தெரிவித்துள்ளனர். இதனால் இல்லத்தரசிகள் மின்சார அடுப்புகளுக்கு மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவகங்களும் விலையேற்றம் அல்லது தற்காலிக மூடல் குறித்து எச்சரித்துள்ளன.
சுமார் 36 சதவீத நுகர்வோர் ஒரு சிலிண்டருக்கு 100 முதல் 500 ரூபாய் வரை கூடுதல் பணம் செலுத்தியுள்ளனர். இந்த சூழலைச் சமாளிக்க, எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், பதுக்கலை தடுக்க மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Edited by Siva