1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2014 (11:32 IST)

நாடாளுமன்ற தேர்தல்: 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

நாடாளுமன்ற தேர்தலின் 7வது கட்டமாக இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் 349 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், 7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
 
குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தெலங்கானாவில் நாடாளுமன்ற தேர்தலுடன், முதல் சட்டமன்ற தேர்தலும் நடப்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை விவரங்கள்:-
 
குஜராத்-26, ஆந்திரா-17, உத்தரபிரதேசம்-14, பஞ்சாப்-13, மேற்கு வங்கம்-9, பீகார்-7, காஷ்மீர்-1, யூனியன் பிரதேசங்களான தத்ரா நகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன் தலா ஒரு தொகுதிகள். தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள். மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், சோனியா காந்தி உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கின்றனர்.
 
இன்றைய தேர்தலில் முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த 89 தொகுதிகளில் 1,295 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 13 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ளது.