வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 14 மார்ச் 2015 (13:58 IST)

மேகதாது அணை திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கடந்த பல ஆண்டுகளாகவே கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் போதிலும், தமிழகத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
 
ஆனால், மேகதாது அணை திட்டத்தை எப்படியும் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது களமிறங்கியுள்ள கர்நாடக அரசு, புதிய அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3 நிறுவனங்களை முதற்கட்டமாக தேர்வு செய்திருக்கிறது.
 
இதன் அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நிதியை நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா ஒதுக்கியுள்ளார்.
 
புதிய அணை கட்டுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்த பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
 
மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை என்றும், இது குறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்தவோ, ஒப்புதல் பெறவோ தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைகள் காவிரி நடுவர் மன்றத்தீர்ப்புக்கு எதிரானவை என்பது மட்டுமின்றி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்க கூடியவையாகும். கர்நாடக அரசின் இத்தகைய அத்துமீறலை மத்திய அரசு அனுமதிப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
 
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டுள்ள புதிய அணையில் 48 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது.
 
தமிழகத்தில் வடக்கே சென்னையில் தொடங்கி, தெற்கே மதுரை, ராமநாதபுரம் வரை உள்ள 5 கோடி மக்களின் குடிநீர் தேவையை காவிரி நீர்தான் நிறைவேற்றுகிறது. மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட்டால், இத்திட்டங்கள் பயனற்றுப்போய் விடும். மொத்தத்தில் தமிழகம் பாலைவனமாகிவிடும்.
 
காவிரி நீர் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைப்பதுதான் இப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும்படி பலமுறை வலியுறுத்தியும் 'எல்லாம் தெரிந்த முதலமைச்சர்' அந்த யோசனையை ஏற்கவில்லை.
 
மேகதாது அணை கட்ட தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 4 மாதங்கள் ஆகும் நிலையில் அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதிலிருந்தே இப்பிரச்சினையில் தமிழக அரசின் அக்கறையை புரிந்து கொள்ளலாம்.
 
காவிரி நீர் இல்லை என்றால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் இல்லை என்பதை உணர்ந்து கர்நாடகத்தின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப்போட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து, அதில் எடுக்கப்பட்ட முடிவை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
 
மத்திய அரசும் இப்பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் நீதியின் நோக்கில் பார்த்து மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
நேற்று, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகள் கட்டுவதற்கான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க இந்த ஆண்டு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. என்று கர்நாடக மாநில பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.