வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2015 (18:04 IST)

'இந்தியாவின் மகள்' ஆவணப்படம் போலியானது: பாதிக்கபட்ட மாணவியுடன் பேருந்தில் இருந்த ஆண் நண்பர் பேட்டி

டெல்லியில், கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.
 
அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
நாடு முழுவதிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இவர்களில் ஒருவர், சிறுவன் என்பதால் பின்னர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். ஒரு குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டார். பேருந்தின் ஓட்டுனர் முகேஷ் சிங் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
 
இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பிபிசி–4 குழுவினர் இந்த பலாத்கார சம்பவத்தை மையமாக வைத்து ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளனர்.
 
இதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முகேஷ் சிங்கிடம், சிறை அதிகாரிகள் அனுமதியுடன் பேட்டியும் எடுத்தனர். குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டி முழுமையாக ஊடகங்களில் வெளியானது. இதை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கபட்டது. ஆனால் உலகம் முழுவதும் இந்த ஆவணப்படம் வெளியானது.
 
இந்த ஆவணப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதிக்கபட்ட மாணவியின் ஆண் நண்பர் அவனிந்திரா பாண்டே கூறியதாவது:-
 
லெஸ்லி உத்வின் இந்த விவகாரத்தை உணர்ச்சி பூர்வமாக அணுகவில்லை. ஆவணப்படம் பாதிக்பட்ட பெண்ணின் பக்கம் இருந்து எடுக்கப்படவில்லை. இது ஒரு  சமநிலையற்ற தன்மையில் எடுக்கபட்டுள்ளது. உண்மைகள் மறைக்கப்பட்டு போலியான தகவல்களால் எடுக்கப்பட்டுள்ளது. எனக்கும் ஜோதிக்கும் தான் அன்று இரவு என்ன நடந்தது என்று தெரியும். ஆவணப்படம் உண்மையில் இருந்து தூரத்தில் இருக்கிறது.
 
தன் தோழியை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலையில் இருந்து காப்பாற்ற கொலைகாரர்களிடம் கடுமையாக போராடினேன். ஆனால் அவர்கள் என்னை மிகக் கொடூரமான முறையில் தாக்கி படுகாயபடுத்தினர் எனக் கூறினார்.
 
அவனிந்திரா பாண்டே அன்று இரவு ஆக்‌ஷன் படம் பார்க்க வேண்டும் என்றும், ஜோதி லைப் ஆப் பை படம் பார்க்க விரும்பியதாகவும் ஆவணப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. நான் அந்த இரவில் பார்க்க விரும்பிய படம் அவர்களுக்கு எப்படி தெரியும் என கேள்வி எழுப்பி உள்ளார்.
 
இந்த சர்ச்சை தேவை இல்லாமல் உருவாக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படம் உணர்வுகளை கேலி செய்கிறது. நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்வி குறியாக்குகிறது. இந்த ஆவணப்படம் நாட்டின் மதிப்பை குறைக்கிறது. இந்த ஆவணப்படம் எந்த ஒரு தனிப்பட்ட மனிதனும்  நமது நாட்டின் மத்திய சிறைச்சாலைக்குள் நுழைய முடியும்; குற்றவாளிகளிடம் பேட்டி எடுக்க முடியும் என காட்டுகிறது. இது போன்ற ஆவணப்படங்களுக்கும் தணிக்கைக்குழு இருக்கவேண்டும். தற்போது எனக்கு உடல் நிலை நன்றாக உள்ளது. ஆனால் மனதளவில் இன்னும் தயாராக வில்லை என்று அவர் கூறினார்.