1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (11:40 IST)

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

Antillia House

சமீபத்தில் மத்திய அரசு வக்பு சட்டத்திருத்தத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அம்பானி வீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

இஸ்லாமியர்களின் வக்பு வாரியத்தின் கீழ் இந்தியா முழுவதும் பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ள நிலையில் அவற்றை ஒருங்கிணைத்து நிர்வகிக்க மத்திய அரசால் வக்பு வாரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த சட்டம் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, வக்பு வாரியத்தின் சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது.

 

ஆனால் மும்பையில் உள்ள அம்பானியின் ஆண்டிலியா மாளிகை வக்பு வாரிய நிலத்தில் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக மும்பையில் உள்ள ஆண்டிலியா மாளிகை சுமார் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே மிக விலை உயர்ந்த தனிநபர் மாளிகையாக ஆண்டிலியா மாளிகை உள்ளது.
 

 

இந்த மாளிகை கட்டுவதற்காக முகேஷ் அம்பானி 2002ம் ஆண்டில் நான்கரை லட்சம் சதுரடி உள்ள நிலத்தை ரூ.21 கோடிக்கு வக்பு வாரியத்திடம் வாங்கியுள்ளார். ஆனால் இந்த நிலம் கரீம் பாய் இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமானது. அவர் அந்த நிலத்தை மதக்கல்வி நிலையம் அல்லது அனாதை இல்லம் கட்டுவதற்காக வக்பு வாரியத்திற்கு வழங்கியுள்ளார். இதுப்பற்றிய வழக்கு ஏற்கனவே நடந்து வருகிறது.

 

அதனால் வக்பு வாரியத்திற்கு உரிமையான நிலத்தில் அம்பானி வீடு கட்டியிருப்பது குறித்து நீதிமன்றத்தில் அம்பானிக்கு எதிராக தீர்ப்பு வெளியானால் அவர் வீட்டை விட்டுத்தர வேண்டியிருக்கும். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் மாற்று ஏற்பாடுகள் என்ன செய்யலாம் என அம்பானியின் சட்டத்துறை வல்லுனர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K