வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (16:25 IST)

பாலிவுட் நட்சத்திரங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டோம் - இந்தியன் முஜாகிதீன் தலைவர்

இந்திய - நேபாள எல்லைக்கு அருகே கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் விசாரணையின் போது, பாலிவுட் நடிகர்கள் கூடியிருக்கும் இடத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.  
இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டதை அடுத்து, மோனு என அழைக்கப்படும் டேஹ்சின் அக்தர் இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டதாக தெரிகிறது. 
 
இவர் கடந்த மாதம் நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி காவல் துறை சிறப்புப் படையினரின் கண்காணிப்பில் இருக்கிறார். 
 
காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது  டேஹ்சின் அக்தர், ஒரு நாள் நான், யாசின் பட்கல் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்துவது குறித்து பேசினோம். அப்போது யாசின் பாலிவுட் நடிகர், நடிகைகள் கூடியிருக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தவேண்டுமென விருப்பம் தெரிவித்தார். 
 

இதற்கு அவர் தெரிவித்த காரணம்,  பாலிவுட் நடிகர்கள் இளைஞர்களை நிர்வாணம், ஆபாசம் உள்ளிட்டவற்றை படங்கள் மூலம் காண்பித்து சீரழிப்பது தான்.   
பாலிவுட் நட்சத்திரங்கள் கூடும் கூட்டத்தில் தாக்குதல் நடத்த யாசின் திட்டமிட்டார். அப்போது தான் அதிகமான நடிகர், நடிகைகள் இறப்பார்கள் என அவர் கருதினார்' எனத்தெரிவித்துள்ளார். 
 
மேலும், 2011 ஆம் ஆண்டு இதுகுறித்து நாங்கள் பேசினோம், இந்த தாக்குதல் குறித்த விஷயம்  என்னை தவிர வேறு யாருக்காவது தெரியுமா என்பது குறித்து எனக்கு ஏதும் தெரியவில்லை எனக் கூறிய டேஹ்சின் அக்தர் அன்றைய காலக்கட்டத்தில் தாக்குதல் நடத்தினால் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு தாக்கம் இருக்குமா என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்ததாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.