1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 7 மார்ச் 2016 (17:28 IST)

ரூ.1 லட்சத்துக்கு மனைவியை விற்பதாக பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்த கணவர்

கடனை அடைப்பதற்காக தன்னுடைய மனைவியை ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்ய விரும்புகிறேன் என்று ஒருவர் பேஸ் புக்கில் விளம்பரம் கொடுத்த சம்பவம் இண்டூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இண்டூரில் வசிக்கும் திலிப் மாலி(30) என்பவர், சமீபத்தில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் “ நான் நிறைய பேரிடம் கடன் வாங்கியிருக்கிறேன். அந்த கடனை அடைப்பதற்காக, நான் என்னுடைய மனைவியை ரூ.1 லட்சத்திற்கு விற்பதற்கு தயாராக இருக்கிறேன். யாருக்காவது விருப்பம் இருந்தால் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்” என்று இந்தியில் விளம்பரம் கொடுத்திருந்தார். அதோடு, தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகளின் புகைப்படங்களையும் பதிவு செய்திருந்தார்.
 
இதைக் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விளம்பரத்தை கண்ட, அவரின் மனைவியின் உறவினர், இதுபற்றி அந்த பெண்ணிடம் கூறினார். இதனால் கோபம் அடைந்த அவரின் மனைவி, தன்னுடைய கணவன் திலீப் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து திலீப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
திலீப்பிடம் பணம் கொடுத்தவர்கள், அதை திருப்பிக்கேட்டு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவரிடம் பணம் இல்லை. இதனால் அவர்களிடமிருந்து தப்பிக்க, இண்டூரிலிருந்து வெளியேறி அருகில் உள்ள தனது சொந்த கிராமத்தில் தனியாக வசித்திருக்கிறார் திலீப்.
 
அதேபோல், அவரின் மனைவியும், தன்னுடைய மகளை கூட்டிக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்தான், திலீப் இப்படி ஒரு விளம்பரம் கொடுத்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.