1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Gold-Plated Ramcharitmanas Worth Rs 5 Crore Stolen From Ayodhya Ram Mandir, Alleges Former Home Secretary

ரூ. 5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட புனித நூல் திருட்டு.. என்ன நடக்குது அயோத்தி ராமர் கோவிலில்?

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய திருட்டு புகார் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் எஸ். லட்சுமிநாராயணன், தனது குடும்பத்தினரால் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் ரூ. 5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட 'ராமசரிதமனஸ்' புனித நூல் காணாமல் போயுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
 
1970-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான லட்சுமிநாராயணன், கடந்த 2024 ஏப்ரல் மாதம் ராமர் கோயில் பிரதிஷ்டைக்குப் பின் வந்த முதல் ராம நவமியின் போது இந்த நூலை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். சுமார் 150 கிலோ எடை கொண்ட இந்த புனித நூலில், 800 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தனது மறைந்த தாயாரின் தங்க நகைகளை உருக்கி இதன் பக்கங்களில் தங்க முலாம் பூசப்பட்டதாக அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
கோயிலுக்கு வந்த தனது உறவினர்கள் இந்த நூல் அங்கு வைக்கப்படவில்லை என்று கூறியதைத் தொடர்ந்து, லட்சுமிநாராயணன் அயோத்திக்கு நேரில் சென்று ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயைச் சந்தித்துள்ளார். பல கடிதங்கள் எழுதியும் அறக்கட்டளையிடமிருந்து முறையான பதில் இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். 
 
ஏற்கனவே அறக்கட்டளையின் ரூ. 7 முதல் 7.5 கோடி மதிப்பிலான நன்கொடைப் பணத்தை கையாடல் செய்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ள நிலையில், இந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நூல் திருட்டுப் புகார் விவகாரத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
 
Edited by Siva