வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (00:30 IST)

வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் ’புலி ஆட்டம்’

இருநூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே புலிவேடமிட்டு ஆடிய புலிக்களி ஆட்டத்தை தற்போது கேரள மாநிலம் திருச்சூரில் நான்கு பெண்கள் மிகச்சிறப்பாக ஆடியுள்ளனர்.
 

 
திருச்சூரில் இந்த நான்கு பெண்கள் ஆடிய புலிக்களி ஆட்டத்தின் மூலம் ஒரு புதிய வரலாறு படைத்துள்ளனர். இவர்கள் தங்கள் உடம்பில் புலிபோல் கோடுகளை வரைந்த உடையை அணிந்து கொண்டு ஆண் புலிகளுடன் நடனம் ஆடி ஓணத்தை கொண்டாடினர்.
 
 
கேரள காவல்துறையில் ஏ.எஸ்.ஐ.ஆக இருக்கும் என்.ஏ.வினயா, நிலாம்பூரிலிருந்து பள்ளி ஆசிரியை திவ்யா திவாகர், கோழிக்கோட்டிலிருந்து பேஷன் டிசைனர் சகீனா ஆகிய மூன்று பெண்களும் விய்யூர் தேசம் புலிக்களி குழுவில் உள்ளனர். இவர்களுடன் நான்காவதாக, அய்யன்தோல் தேசம் குழுவில் உள்ள ரஹ்னா பாத்திமா என்ற பெண்ணும் இணைந்து கொண்டார்.
 

 
இவர்களின் இந்த நடனத்தை கண்டு ஓணம் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அவர்களை வியந்து பாராட்டினர். பாரம்பரிய மேள தாளங்களுடன் வலம் வந்த இந்த நான்கு பெண் புலிகளையும், இவர்களது பெண் ரசிகர்கள் உட்பட அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
 
இதில் வினயா மற்றும் பாத்திமா ஆகிய இருவரும் சிறுத்தை போல் வேடமிட்டிருக்க, திவாகர் மற்றும் சகீனா ஆகியோர் புலி வேடத்தை தேர்ந்தெடுத்திருந்தனர். இவர்களது உடலில் இருந்த சிறுத்தை, புலி ஓவியத்தை விய்யூர் ஓவியர்கள் ஸ்ரீதேவி மற்றும் ஷீலா ஆகியோர் வரைந்திருந்தனர்.
 
விங்ஸ் அமைப்பின் மாநிலத் தலைவராக உள்ள வினயா கூறுகையில், “பல பொது திருவிழாக்கள், பெண்கள் தலையிடாமல் இருப்பதினால் பெரும்பாலும் ஆண்களை முன்னிறுத்தி கொண்டாடுபவையாகவே உள்ளன.
 
நாம் இந்த சமுதாயத்தில் பெண்களுக்கான இடத்தைப் போராடி பெறவேண்டும். இதை நாம் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.