இந்தியாவில் இனி ஆல்கஹாலில் ஓடும் கார்கள்? 85% எத்தனால் கலந்த பெட்ரோல் விரைவில் அறிமுகம்
இந்தியாவில் பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கவும், சுற்றுசூழல் மாசை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 85 சதவீதம் எத்தனால் மற்றும் 15 சதவீதம் பெட்ரோல் கலந்த 'E85' எரிபொருளுக்கான வரைவு விதிகளை அரசு விரைவில் வெளியிட உள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள 'E20' பெட்ரோலை தாண்டி, இது இந்தியாவின் எரிசக்தி துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள சூழலில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கரும்பு, சோளம் மற்றும் தானியங்களிலிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் எத்தனால், இந்தியாவின் இறக்குமதி சுமையைப் பெருமளவு குறைக்கும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதி மூலம் ஈடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், E85 எரிபொருளைப் பயன்படுத்த சாதாரண பெட்ரோல் இன்ஜின்கள் போதாது. இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Flex-fuel இன்ஜின்கள் கொண்ட வாகனங்கள் தேவைப்படும். சாதாரண கார்களில் இந்த எரிபொருளை பயன்படுத்தினால் இன்ஜின் பாகங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது.
நிதின் கட்கரி ஏற்கனவே 100% எத்தனால் மூலம் இயங்கும் காரை அறிமுகப்படுத்தி பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் வாகன உற்பத்தியாளர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கார்களை தயாரிக்க தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
