குழந்தைகள் காப்பகத்தில் நடந்த கொடூரங்கள்.. இப்படி எல்லாம் சித்திரவதை செய்வார்களா?
பெங்களூருவில் உள்ள கேப்கெமினி நிறுவனத்தின் வளாகத்தில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில், இரண்டு வயது குழந்தைகள் கொடூரமாக சித்திரவதை செய்யப்படும் வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோக்களில், அழும் குழந்தைகளுக்கு தண்டனையாக அவர்கள் வாஷிங் மெஷின் டிரம்முக்குள் கட்டாயப்படுத்தி உட்கார வைக்கப்படுவதும், ஜெட் ஸ்ப்ரே மூலம் வாயில் தண்ணீர் அடிக்கப்படுவதும், பாத்ரூமிற்குள் பூட்டி வைக்கப்படுவதும் போன்ற கொடூரங்கள் பதிவாகியுள்ளன.
குழந்தைகள் உதவி மையத்திற்கு வந்த அழைப்பின் பேரில், எச்ஏஎல் காவல் நிலைய போலீசார் சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அங்கு பணிபுரிந்த மஞ்சுளா, விஜயலட்சுமி, சிந்து, பவானி மற்றும் பிந்து ஆகிய ஐந்து பெண் ஊழியர்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெண் டிசிபி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கேப்கெமினி நிறுவனம் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே தங்களுக்கு முக்கியம் என்று கூறி, பெங்களூரு வளாகத்தில் உள்ள அந்தக் குழந்தைகள் காப்பகத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளது. மேலும், போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
