வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 27 அக்டோபர் 2014 (13:00 IST)

கருப்புப் பண விவகாரத்தில் 3 தொழில் அதிபர்களின் பெயர்கள்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்

வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கியதாக 3 தொழிலதிபர்களின் பெயர்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
 
இந்தியாவில் உள்ள கோடீசுவரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக ரூ. 30 லட்சம் கோடிக்கு மேல் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தெரிவித்து இருந்தது.
 
கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற பாஜக அரசு, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க முயற்சி செய்வதாகவும் அதற்கென தனி குழு அமைக்கப்படுவதாகவும் கூறியது.
 
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜெர்மனியுடன் செய்துள்ள ஒப்பந்தம் காரணமாக கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை வெளியிட இயலவில்லை என்றார்.
 
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விஷயத்தில் பாஜக இரட்டை நிலைப்பாட்டை கடை பிடிப்பதாக குற்றஞ்சாட்டினார்கள்.
 
இதற்குப் பதில் அளித்த அருண்ஜேட்லி, வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிட்டால் அது காங்கிரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதையடுத்து கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களில் 3 பேர் பெயர்களை முதலில் அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பற்றிய பட்டியல் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
அதில் 3 கோடீசுவரர்கஜளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதீப் பர்மன்: இவர் தபூர் குரூப் தொழில்களின் இயக்குனர் ஆவார். பங்கஜ் சிமன்லால் லோதியா: இவர் ராஜகாட் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர். கோவாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ராதா எஸ். டிம்ப்ளோ.
 
இந்த 3 தொழில் அதிபர்களும் வெளிநாட்டு வங்கிகளில் எத்தனை கோடி பணம் பதுக்கியுள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் அரசியல்வாதிகள் யார் பெயரும் இடம் பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.