வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 19 மார்ச் 2015 (20:16 IST)

கங்கையை கொண்டு வந்தது யார்? மக்களவையில் பாஜக உறுப்பினர் கேள்வியால் சிரிப்பலை

மக்களவையில் இன்று கங்கையை கொண்டு வந்தது யார்? என்று பாஜக உறுப்பினரின் கேள்வி மற்ற உறுப்பினர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது.
 
மக்களவை இன்று கூடியதும் கேள்வி நேரத்தின்போது மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் சன்வார் லால் ஜாட் பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, பாஜக உறுப்பினர் பிரபாத்சிங் சவுகான், கங்கை நதி குறித்து கேள்வி எழுப்பினார்.
 
கங்கை நதியை யார் கொண்டு வந்தது? ஏன் அவர் கொண்டு வந்தார்? அதில் குளித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்று அதிரடியான கேள்விகளை சவுகான் கேட்டதும், அவையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் சிரித்தனர். சிலர் ஆச்சரியத்துடன் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தனர் .
 
மக்களைவா சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் வியப்புடன் உறுப்பினர் சவுகானைப் பார்த்து, ‘என்ன இது?... இது ஒரு கேள்வியா?’ என்று வேடிக்கையாக எதிர்கேள்வி எழுப்பினார்.
 
இந்த கேள்விக்கு பதிலளித்த நீர்வளத்துறை இணை அமைச்சர் தன்வார் லால் ஜாட், இதுவொரு வரலாற்று விஷயம். மக்களின் நலன் கருதி கங்கை நதியை பாகீரத மன்னன் கொண்டு வந்தான். இதனால் அங்கு வழிபாடு நடத்தப்படுகிறது என்று கூறி மக்களையில் ஏற்பட்ட சிரிப்பலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.