பெண் பத்திரிகையாளர்களும் வாருங்கள்.. புதிய பேட்டிக்கு அழைப்பு விடுத்த ஆப்கன் அமைச்சர்..!
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, புது டெல்லியில் வெள்ளிக்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களை விலக்கியதால் கடும் எதிர்ப்பை சந்தித்தார். 'ஆண்கள் மட்டுமே' கலந்துகொண்ட நிகழ்வு குறித்து பத்திரிகையாளர் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் மற்றும் இந்திய பெண் பத்திரிகையாளர் குழு ஆகியவை இதை கண்டித்தன.
கண்டனங்கள் வலுத்ததை தொடர்ந்து, முத்தாகியின் குழு இன்று அனைவரையும் உள்ளடக்கிய' மற்றொரு ஊடக சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அரசு, முந்தைய ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்வதில் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறி விலகிக்கொண்டது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் இதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பினர். ராகுல் காந்தி, "பொதுவெளியில் பெண்களை புறக்கணிக்க அனுமதிப்பது, பெண்களுக்காக நிற்க நீங்கள் பலவீனமானவர் என்பதையே காட்டுகிறது" என்று விமர்சித்தார்.
2021-ல் ஆட்சிக்கு வந்த தலிபான்கள், பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து சர்வதேச அளவில் விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva