நடிகை பாலியல் பலாத்காரம்: காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட 6 பேர் கைது
விளம்பரப் பட நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காவல்துறை உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து மும்பை நகரக் காவல் துறை துணை கண்காணிப்பாளர் தனஞ்சய் குல்கர்னி கூறியதாவது:-
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், மும்பை நகர காவல் துறைக் கண்காணிப்பாளர் ராகேஷ் மரியாவிற்கு கடந்த 21ஆம் தேதி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், மும்பை காவல் துறையைச் சேர்ந்த 2 உதவி ஆய்வாளர்கள், 1 தலைமைக் காவலர் ஆகியோர் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு ஒரு பெண் துணை போனதாகவும் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அவர், ராகேஷ் மரியாவை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அந்த புகாரில், அவரை சம்பந்தப்பட்ட நபர்கள் பலாத்காரம் செய்த பின்னர், மிரட்டிப் பணம் பறித்ததாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் புகாரை அடுத்து, மும்பை எம்.ஐ.டி.சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.