முல்லைப் பெரியாறு விவகாரம்: அரசு தரப்பு முறையாக வாதாட தவறிவிட்டது - அச்சுதானந்தன்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாமென என்ற உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து கேரளா முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் வேளையில், இது தொடர்பாக தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாமென என்ற உச்ச நீதிமன்ற திறமை தொடர்ந்து கேரளாவில் இன்று முல்லைப்பெரியாறு போராட்டக்குழு முழுஅடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது.
கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியோ, எதிர்க்கட்சியோ இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளதாக பல கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்த்தின் தீர்ப்பில், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்றும் புதிய அணை கட்ட கேரளாவிற்கு அனுமதி இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அச்சுதானந்தன் பேசுகையில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு துரதிருஷ்டவசமானது. இந்த வழக்கில் கேரள அரசு தரப்பில் முறையாக வாதாடாததால் கேரள அரசுக்கு தோல்வி கிடைத்துள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இடுக்கி, கோட்டயம் உள்பட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஆபத்து ஏற்படும்' என்று தெரிவித்துள்ளார்.