1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Modified: திங்கள், 12 மே 2014 (13:22 IST)

மூன்றாவது அணிக்கு ஆதரவு கொடுக்க தயார் - ஆம் ஆத்மி

பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க மூன்றாவது அணிக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் கூறியதாவது:-
மே 16 ஆம் தேதி வெளியாகும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அடிப்படையில் மாற்று அணி அமைப்பது தொடர்பாக முன்முற்சி எடுக்கப்பட்டால், அந்த அணிக்கு பிரச்சனை அடிப்படையில் ஆதரவு தருவது பற்றி ஆம் ஆத்மி கட்சி பரிசீலிக்கும். கட்சியின் எதிர்கால திட்டம் பற்றி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதனை அலசி ஆராய்ந்து முடிவு செய்வோம்.
 
நேர்மையானவர்களின் குரலே நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பது எங்கள் லட்சியம். 10 தொகுதிகளோ அல்லது 30 தொகுதிகளிலோ வெற்றி பெற்றாலும் அது எங்களுக்கு பெரிதல்ல. நாடாளுமன்றத்துக்கு சென்று நமது அரசு, நிர்வாக அமைப்பில் மாற்றம் கொண்டுவர வலியுறுத்துவதுதான் எங்கள் தலையாய நோக்கம்.
 
சாமானியர்களின் நலனுக்கானது எங்கள் கட்சி. மூன்றாவது அணிக்கு ஆதரவு என்பது பிரச்சனை அடிப்படையில்தான் அமையும். இறுதி முடிவு மே 16 ஆம் தேதிக்குப் பிறகு எடுக்கப்படும் என்று கோபால் ராய் கூறினார்.
இதனிடையே, கோபால் ராய் தெரிவித்த கருத்தை கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்தார். ஊழலில் தொடர்புடைய தலைவர்கள் இடம்பெற்ற கட்சிகள் அங்கம் வகிக்கும் எந்த ஒரு கூட்டணியிலும் ஆம் ஆத்மி கட்சி சேராது என்று ஞாயிற்றுக்கிழமை மாலை விடுத்த அறிக்கையில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.