வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 19 மார்ச் 2015 (14:16 IST)

மேற்கு வங்காளத்தில் மேலும் ஒரு 75 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை

மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று மேலும் ஒரு மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டிக்கு வயது 75.
 
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தின் ரானாகட் அருகே உள்ள கங்னாப்பூர் கிராமத்தில் கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 14ஆம் தேதி நுழைந்த மர்ம நபர்கள் 7 பேர், 71 வயது கன்னியாஸ்திரி ஒருவரை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அங்கிருந்த சுமார் ரூ.12 லட்சத்தை கொள்ளையிட்டு சென்றனர்.
 
மேற்கு வங்காளம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். சம்பவத்தின் போது அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
 
இந்த வழக்கு தொடர்பாக 15 பேரிடம் காவல்துறையினர் இதுவரை விசாரணை நடத்தியுள்ளனர். எனினும் யாரையும் காவல்துறையினர் இன்னும் கைது செய்யவில்லை. இது மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதைத்தொடர்ந்து கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கை சிபிஐ - யிடம் ஒப்படைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தனது ‘பேஸ்புக்’ வலைத்தளத்தில் கூறியுள்ள மம்தா பானர்ஜி, ‘ரானாகட் சம்பவம் மிகவும் கடுமையானது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று மேலும் ஒரு மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட அந்த மூதாட்டிக்கு 75 வயதாகிறது. விதவையான அவர் ஆசிரமம் ஒன்றில் தங்கியிருந்தார்.
 
நேற்று அந்த மூதாட்டி சாமி கும்பிட்டு விட்டு திரும்பிய போது மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவரது உடல் ஆசிரமத்துக்கு வெளியில் வீசப்பட்டிருந்தது. காவல்துறையினர் அந்த மூதாட்டி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பிறகு 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள் மேலும் ஒரு மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது மம்தா அரசுக்கு நெருக்கடியை அதிகரிக்க செய்துள்ளது.
 
பரத்வானில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கெத்வா என்ற பகுதியில்தான் ஆசிரமம் உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்கள் கோபம் அடைந்து ஆசிரமம் மீது தாக்குதல் நடத்தினர்.