செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2015 (16:33 IST)

மெட்ரோ ரயிலில் இருக்கை பிடிப்பதில் தகராறு: பள்ளி மாணவன் படுகொலை

டெல்லி மெட்ரோ ரயிலில் 16 வயது பள்ளி மாணவன் ஒருவன் இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சக மாணவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் புராரி பகுதியில் தன் பெற்றோருடன் வசித்து வரும் 16 வயதான ஐஷு என்ற மாணவன் அதன் அருகில் உள்ள பகுதியில் அரசு பள்ளியில் படித்து வந்தான், வழக்கமாக அவன் பள்ளிக்கு ரயிலில் செல்வான், வழக்கம்போல் கடந்த செவ்வாய்க்கிழமை ரெயிலில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது ரயிலில் இருக்கை பிடிப்பதில் ஐஷுவின் பள்ளி நண்பர்களுக்கும் மற்றொரு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

மறுநாள் மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐஷுவும் அவனது நண்பர்கள் இருவரும் கிங்ஸ்வே கேம்ப் அருகே வந்தபோது, முந்தைய தினம் தகராறு செய்த ஐந்து மாணவர்கள் ஐஷூ மற்றும் அவனது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.

இதில் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர், இந்த மோதலில் எதிர் தர்ப்பில் உள்ள ஒரு சிறுவன் ஐஷுவை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளான். ஐஷு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததும் எதிர் தரப்பு ஐந்து மாணவர்களும் தப்பியோடியுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஐஷுவை மருத்துவமனையில் அனுமத்தித்தனர். பின்னர், இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ஐந்து மாணவர்களையும் கைது செய்து சிறார் குற்றவாளிகளுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஷூ சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், அந்த ஐந்து மாணவர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.