வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sasikala
Last Updated : ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (11:42 IST)

சென்னை 600 028 இரண்டாம் இன்னிங்ஸ் - திரை விமர்சனம்

சென்னை 28 படத்தில் இயக்குநராக அறிமுக ஆனார் வெங்கட் பிரபு. தற்போது பத்து வரடங்கள் கழித்து அதே கதை ஆனால் வேறு களத்தில் செகண்ட் இன்னிங்ஸ் விளையாட வந்திருக்கிறது டீம். சென்னை ஷார்க்ஸ் டீம் முதல் பாகத்தில் ராக்கர்ஸை செமி ஃபைனலில் ஜெயித்து இத்தோடு  10 வருடங்கள் ஆகிவிட்டன. 

 
ப்ளேயர்ஸ் எல்லோருமே வேறுவேறு இடத்தில் வேலை, மனைவி, குழந்தை என செட்டில் ஆகிவிடுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஜெய் திருமணத்திற்காக ஒன்று சேர்கிறார்கள். ஐடியில் வேலை செய்யும் ஜெய்யின் காதலி தான் சானா அல்ஃதாப். இவர்களின் திருமணத்திற்காக சென்னை 28 டீம், தேனி பக்கம் ட்ரிப் அடிக்கிறார்கள். அரவிந்த் ஆகாஷ் தேனியில்  ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன். அவரது அணிக்கு கடும் சவாலாக எட்டு வருடங்களாக கோப்பையை வென்று கொண்டிருக்கிறது வைபவின் அணி. தனது டீம் நண்பர்கள் தேனியில் வந்து இறங்கியதும் குஜாலான அரவிந்த், அவர்களை வைத்து வைபவின் அணியை ஜெயிக்க திட்டம் தீட்டுகிறார்.
 
ஒரு வாரத்திற்குள் திருமணத்தை வைத்துக்கொண்டு கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஜெயிப்பதற்காக எதிர் டீம் கேப்டன் வைபவ் செய்யும் சூழ்ச்சியால், ஜெய் திருமணம் நின்றுபோகிறது. அந்த மேட்ச் என்னாகிறது,  டீம் மீண்டும் ஜெயித்ததா, ஜெய் காதலித்த பெண்ணை திருமணம் செய்தாரா என்பதை ஜாலி கலாட்டாவாக சொல்லிருப்பதுதான் மீதி கதை.“அவதார் படத்தை எங்க ஊரு வியட்நாம் காலனில இருந்து சுட்டதுதான்னு எங்களுக்கு தெரியாதா மிஸ்டர் கேமரூன்?” என அவர் அறிமுகமாகும் காட்சிக்கே தியேட்டரில் க்ளாப்ஸ் அள்ளுகிறது. நண்பர்கள் என்ற கதைக்களத்தை தொடர்ந்து கையாண்டு கொண்டிருக்கிறார் வெங்கட்பிரபு. அதற்கு பாராட்டுகள்.



யுவன் பின்னணி இசை, இண்ட்ரோ பாடல்கள் என்று அசத்தியிருக்கிறார்.  ‘சொப்பன சுந்தரி’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ‘வர்றோம் சொல்லு தள்ளி நில்லு’ பாடல் ரசிக்க வைக்கிறது. ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு சென்னையையும் பசுமை நிறைந்த தேனியையும் சிறப்பாக படம்பிடித்துள்ளது.
 
சென்னை 28யை விட, இந்தப் படத்தில் காமெடி காட்சிகள் கொஞ்சம் தூக்கல் தான். சென்னை 28ல் இல்லாத புது என்ட்ரி கொடுத்திருக்கும் வைபவை பொக்கே கொடுத்து வெல்கம் செய்யலாம். மீசையை முறுக்கிக்கொண்டே அவர் செய்யும் வில்லத்தனங்கள் அவரது கதாபாத்திரத்துக்கு அருமையாக செட் ஆகிறது.
 
‘சென்னை 28’ முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகத்தையும் ரொம்பவும் ஜாலியாகவும், ரகளையாகவும் கொண்டு சென்றிருக்கிறார் வெங்கட் பிரபு. கிரிக்கெட், அதைச்சுற்றி நடக்கும் போட்டி மனப்பான்மை, நட்பு, செண்டிமென்ட், காதல், நகைச்சுவை என அனைத்தும் இந்த பாகத்திலும் தொடர்ந்திருக்கிறது.
 
படத்தில் ஜெய்க்கு கொஞ்சம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை அவர் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். மிர்ச்சி சிவாவுக்கு இது மிகச்சரியான ரீ-என்ட்ரி படமாக இருக்கும் என்று சொல்லலாம். தனது பாணியிலான காமெடி வசனங்களில் அசத்தியிருக்கிறார். இணையதள விமர்சகர்களை இவர் கலாய்த்திருக்கும் விதம் சிறப்பு. வில்லனைப் போல் வரும், வைபவ் தேனி வட்டார வழக்கு பேச்சில் மட்டுமல்ல, நடை, உடை பாணியிலும் திமிர் கலந்த அடாவடி இளைஞனாக நம் மனதில் பதிந்திருக்கிறார். 
 
10 வருடத்திற்கு சென்னை 28 படத்தை நண்பர்களுடன் விசிலடித்து பார்திருக்கும் அன்றைய இளைஞர்களின் நினைவுகளையும், இன்றைய இளைஞருக்கான நட்பையும் காமெடியாக தந்திருப்பது அருமை. மொத்தத்தில் ‘சென்னை 600 028 இரண்டாம் இன்னிங்ஸ்’ கோப்பை கைப்பற்றும் என்பதில் ஐயமில்லை.