காதல் என்றாலே உடலில் உள்ள அனைத்து ஹார்மோன்களும் தலையை தூக்கிப் பார்த்துவிட்டு போகின்றன. அவ்வளவு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் விஷயம் காதல்தான்.
காதலிக்கத் துவங்கிவிட்டாலே உடலில் ஒரு பரபரப்பு வந்து ஒட்டிக் கொள்ளும். நாம் காதலிப்பதை உரிய நபரிடம் சொல்லும்வரை கத்திமேல் வாழ்க்கைதான்.
அவரிடம் சொல்லி ஒப்புதல் பெற்றாலும் அந்த பரபரப்பு வேறொரு ரூபத்தில் நம்மை சுற்றிக் கொண்டிருக்கும்.
ஆம், பொது இடங்களில் எங்காவது ஒன்றாகச் செல்லும்போது இருவருக்கும் தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால்... ஏன் பெற்றோர் யாராவது பார்த்துவிட்டால் என்ற அந்த அச்சமும் கொஞ்சம் சுவாரஸ்யமானதுதான். அது அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
இதுபோன்று காதலர்கள் காதலிக்கும் நேரத்தில் பல்வேறு விஷயங்களுக்கு பயந்து வாழ வேண்டியுள்ளது.
இதெல்லாம் ஒரு விஷயமா என்று கேட்காதீர்கள். இப்போது சொல்லப்போவதுதான் இருப்பதிலேயே பெரிய விஷயம்.
ஆம், நாம் காதலிக்கும் நபரை நமது பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கும் அந்த ஒரு சந்திப்பு. அந்த நேரத்தில் நமது மனம், சிந்தனை, உடல், செயல் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைகளுக்கு அல்லவா ஓடிக் கொண்டிருக்கும்.
வீட்டிலோ அல்லது கோயில், வெளி நிகழ்ச்சி என எங்கு வேண்டுமானாலும் இந்த சந்திப்பு நிகழலாம். நமது பெற்றோரை காதலர் கவர்வாரா, பெற்றோரது மனதிற்கு பிடித்தவராக காதலர் இருப்பாரா? காரசார விவாதம் வந்துவிடுமா என்று கோடிக்கோடி கேள்விகள் மின்னல் போல சிந்தனையில் சிதறிக் கொண்டிருக்கும்.
பெற்றோரிடம் காதலரைப் பற்றியும், காதலரிடம் பெற்றோரைப் பற்றியும் நாம் சொன்னவைகள் எல்லாம் தண்ணீரில் எழுதியதாகி விடுமா என்ற எண்ணத்தில் நமது மனம் குதிரையாக ஓடிக் கொண்டிருக்கும்.
webdunia photo
WD
பெற்றோருக்கு பிடித்தது போல நடை, உடை, பாவனைகள் எல்லாம் காதலரிடம் ஒப்பித்துவிட்டிருந்தாலும் பார்த்த மாத்திரத்தில் பிடிக்காமல் போய்விடும் அபாயமும் உள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நன்கு பேசிக் கொண்டிருக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கலாம். ஏனெனில் இந்த சந்திப்பு இரண்டு பகை நாட்டுத் தளபதிகளின் சந்திப்பைப் போன்றதுதான்.
ஒரு சில பெற்றோர் வேண்டுமானால் ரொம்ப விட்டுக் கொடுத்து முழு மனதுடன் காதலுக்கு பச்சைக் கொடி காட்டலாம். பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளை காதலிப்பதை அறிந்து கொதித்து பின்னர் காதலரை சந்திக்க வேண்டும் என்று ஆணையிடுவார்கள்.
இந்த சந்திப்பின் மூலம் காதலரிடம் குறை காண மட்டும் பெற்றோர்கள் காத்திருப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் காதலர்கள் என்னதான் அமைதியாக, விட்டுக் கொடுத்துப் பேசினாலும் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இந்த தருணம் எப்படி இருக்கும் என்பதை நம்மில் பாதி பேர் உணர்ந்திருப்பார்கள்.
இந்த சமயத்தில் நமது அச்ச உணர்ச்சியே நமக்கு பகையாகிவிடும். எனவே இதுபோன்ற தருணத்தில் நாம் மிக அமைதியாக, எதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நமது இயல்பான நிலையே நமது காதலருக்கும் அமைதியைக் கொடுக்கும். இதனால் இந்த சந்திப்பு வெற்றி பெற வழி ஏற்படும். நாமே நமது காதலரை கலங்கச் செய்துவிடக் கூடாது.