வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தகவல் தொழில்நுட்பம்
  4. »
  5. செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 21 மே 2014 (19:02 IST)

ஸ்மார்ட்போன், டேப்லட்களை வைத்திருப்பவர்களுக்கு - ஓர் அதிர்ச்சி தகவல்

ஸ்மார்ட்போன்கள், டேப்லட்களை இரவில் அணைத்துவிட்டுத் தூங்கவில்லை என்றால் தூக்கம் பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
 
அமெரிக்க நாட்டின் வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிரையன் ஸோல்டோவ்ஸ்கி இது குறித்து கூறியிருப்பதாவது:-
 
"நாம் இருக்கும் சூழல் இரவா அல்லது பகலா என்று அனிச்சையாக நாம் உணர்வதில் வெளிச்சத்தின் பங்கு முக்கியமானது. பொதுவாகவே, மாலை நேரம் செல்ல செல்ல புறச்சூழலில் சிவப்பு நிறம் அதிகரிக்கிறது. கண்ணின் ஆழப்பகுதியில் இருக்கும் செல்களில் உள்ள மெலனாப்சின் என்ற புரோட்டீன் மீது இந்த சிவப்பு நிறம் விழும்போது, ‘சூரியன் மறைந்துவிட்டது, என்று அந்த செல்கள், மூளைக்கு உத்தரவிடுகின்றன. எனவே, இரவு நேரம் என்றால் கண்ணில் சிவப்புநிற ஒளிதான் படவேண்டும்.
 
இந்த செயல்பாட்டை ஸ்மார்ட்போன்கள், டேப்லட்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றிலிருந்து வெளியேறும் நீல நிற ஒளியானது தொடர்ந்து கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தால், ‘இன்னும் இரவு வரவில்லை’ என்ற தவறான தகவலைத்தான் கண் செல்கள், மூளைக்குக் கடத்தும். ஏனென்றால், நீலநிறம் என்பது அதிகாலை நேரத்திற்கு உரியது. ‘தூங்கியது போதும்’ என்று படுக்கையிலிருந்து நம்மை எழுப்பிவிடுவதற்கு தூண்டும்.
 
எனவே, நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் கிடைக்க வேண்டும் என்றால் ஸ்மார்ட்போன், டேப்லட்களை அணைத்துவிட்டுப் படுங்கள். இல்லாவிட்டால் கண்ணில் படாதவகையில் தூரமாக வைத்துவிட்டாவது படுங்கள்" என்று அந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.