1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : வியாழன், 14 மே 2015 (08:29 IST)

ஐபிஎல்: பஞ்சாப் அணியிடம் 22 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அதிர்ச்சித் தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டின் 50 ஆவது லீக் ஆட்டத்தில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 22 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.


 

 
மொகாலியில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் ன் 50 ஆவது லீக் ஆட்டம் மழையால் 2¾ மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
 
இதில், ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
 
இரவு 8 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த ஆட்டம் மழையால் 2¾ மணி நேரம் தாமதமாக இரவு 10.45 மணிக்கு தொடங்கியது. மழை பாதிப்பால் இந்த ஆட்டம் 10 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இதன்படி பவர் பிளே 3 ஓவராகும். ஒரு பவுலர் அதிகபட்சமாக 2 ஓவர்கள் பந்து வீசலாம்.
 
டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, மனன்வோரா ஆகியோர் களம் இறங்கினார்கள்.
 
முதல் ஓவரில் 14 ரன்கள் எடுத்தனர். விருத்திமான் சஹா தொடர்ந்து 2 பவுண்டரிகளை அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விருத்திமான் சஹா 2 ஆவது ஓவரில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்தார்.
 
3 ஆவது ஓவரின் முதல் பந்தில் விருத்திமான் சஹா ஆட்டம் இழந்தார். அவர் (12 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) 31 ரன்கள் சேர்த்தார். 
 
இதைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்து  திரும்பினர். மனன்வோரா 11 ரன்னிலும், மேக்ஸ்வெல் 10 ரன்னிலும், டேவிட் மில்லர் 14 ரன்னிலும், கேப்டன் ஜார்ஜ் பெய்லி 13 ரன்னிலும், குர்கீரத் சிங் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 
 
இதனால், நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. அக்ஷர் பட்டேல் 20 ரன்னுடனும், ரிஷி தவான் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
 
பெங்களூரு அணி தரப்பில் ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வைஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 
 
இதைத் தொடர்ந்து, 10 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட்கோலி 19 ரன்னிலும் (9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கெய்ல் 17 ரன்னிலும் (14 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்), டி வில்லியர்ஸ் 10 ரன்னிலும் (9 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ஆட்டம் இழந்து ஏமாற்றம் தந்தனர்.
 
தினேஷ் கார்த்திக் 2 ரன்னில்  திரும்பினார். மன்தீப்சிங் (14 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சர்ப்ராஸ்கான் (4 ரன்) வந்த வேகத்திலேயே திரும்பினார். 
 
இந்நிலையில், 10 ஓவர்களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களே எடுத்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
டேவிட் வைஸ் 4 ரன்னுடனும், ஹர்ஷல் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அனுரீத் சிங், அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா, பியூரன் ஹென்ரிக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.