வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு தோல் நோயை விரட்டும் பீர்க்கங்காய்

இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு தோல் நோயை விரட்டும் பீர்க்கங்காய்

பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் போன்றவை தோன்றும்.


 


சளிக் கோளாறுகளும் தோன்றும். அதனால்தான் மார்க்கெட்டுகளில் முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன.
 
நிறைந்துள்ள சத்துக்கள்:
 
100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது. கால்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும், வைட்டமின் 5 மி.கிராமும் உள்ளன.
 
நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.
 
100 கிராம் பீர்க்கனில் கிடைக்கும் கலோரி 18 தான். எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.முற்றிய பீர்க்கனில் லுஃபின் (Luffin) என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது. நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக்கொள்ளக்கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.
 
பயன்கள்:
 
1. சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.
 
2. பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
 
3. சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.
 
4. பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது.
 
5. இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.
 
6. மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.
 
கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
 
தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி!