1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By ஸ்ரீ.ஸ்ரீ.
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2016 (05:00 IST)

திருப்பாவை பாசுரம் பாடல் - 27

திருப்பாவை பாசுரம் பாடல் - 27
 
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்தேலோர் எம்பாவாய்.


 

 
 
பொருள் :
 
நோன்பை நோற்ற நாங்கள், சன்மானம் பெற்று மகிழுமாறு அருள் புரிய வேண்டும் - என வேண்டும் பாடல். (உன்னை) அடி பணியாதவர்களை வெல்கின்ற குணங்களை உடைய கோவிந்தா! உன்னைப் பாடி, உன்னிடம் நாங்கள் வேண்டுகின்ற பறையைப் பெற்று, அதன் பின்னும் நாங்கள் பெறும் சன்மானம் என்ன தெரியுமா?
 
உலகத்தில் உள்ளோர் புகழும் படியாக; கையில் அணியும் ஆபரணங்கள், தோளில் அணியும் பரணங்கள், காதில் அணியும் தோடு, காதை மேலும் அலங்காரம் செய்யும் ஆபரணங்கள், காலில் அணியும் ஆபரணங்கள்; -என்று சொல்லப்படும் பலவகையான ஆபரணங்கள் அணிவோம். (நீ அணிவிக்க) ஆடைகளை அணிவோம்.
 
அதன் பிறகு, பால் சோறு மறையும்படியாக நெய்யை ஊற்றி, அது முழங்கையில் வழியும்படியாக உண்டு, நீயும் நாங்களுமாகக் கூடி இருந்து குளிர வேண்டும்.

                                                                                                  விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.