வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Bala
Last Updated : புதன், 22 ஜூலை 2015 (12:42 IST)

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயில்

தமிழக அரசின் சின்னத்தில் இடம்பெற்றுள்ள, தமிழ்நாட்டின் அடையாளமாக காட்டப்பட்டுள்ள திருவில்லிப்புத்தூர் திருக்கோயில், ஆன்மீன பாரம்பரியத்திலும், கலை, சிற்ப படைப்பிலும் தனித்த முத்திரைப் பெற்ற உன்னத திருத்தலமாகும்.

வைணவ ஆன்மீக பாரம்பரியத்தின் 108 திவ்ய தேசங்களில் முக்கியமான ஒன்றாகும். வைணவ ஆன்மீக பாரம்பரியத்தை வளர்த்த பெரியாழ்வாரும், அவரால் கண்டெடுத்து வளர்க்கப்பட்ட ஸ்ரீ ஆண்டாள் தெய்வத்துள் உரைந்த தெய்வீகத் தலமிது.

இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளின் பெயர் வடபத்ரசாயி. ரங்கமன்னார் எனும் நாமகரத்தாலும் அழைக்கப்படுகிறார். திருவில்லிப்புத்தூரில் வெள்ளம் ஏற்பட்டபோது, ஒரு ஆல் இலையில் (வடபத்ரம்) ஒரு குழந்தையாய் தன்னை சுருக்கிக்கொண்டு திகழ்ந்ததால் இப்பெயரால் அழைக்கப்படுகிறார்.

இக்கோயிலின் வெளிப்பிரகாரத்திலுள்ள அழகிய நந்தவனத்தில் இருந்துதான் குழந்தை ஆண்டாளை பெரியாழ்வார் கண்டெடுக்கிறார். ஆடி மாதம் 8ஆம் நாள் ஆண்டாள் கண்டெடுக்கப்பட்ட நாளில்தான் இத்திருக்கோயிலில் சிறப்பு பூசையும், ஆடிப் பூர விழாவும் (12 நாட்களுக்கு) நடத்தப்படுகிறது.

இறைத் தலத்தில் பிறந்து, இறையருள் மிக்க பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டு, இறைப் பணி செய்து, இறைவனோடு ஒன்றான ஸ்ரீ ஆண்டாள், ஒவ்வொரு நாளும் இறைவைன நினைத்து பாடிய பாசுரங்கள் புகழ் பெற்றவை. அவற்றில் பல, இத்திருக்கோயிலின் சுற்றுச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது.

இக்கோயில் ஆன்மீன பெருமை கொண்டது மட்டுமல்ல, சிற்பக் கலைக்கும் புகழ் பெற்றதாகும். கோயிலின் ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்பங்களின் பின்னணியையும், புராண வரலாற்றையும் அறிந்துகொண்டு ரசித்திடல் வேண்டும்.