வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj kiyan
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2020 (17:10 IST)

வீட்டில் வரலட்சுமி விரதம் கடைபிடித்து பூஜை செய்வது எப்படி...?

வீட்டில் வரலட்சுமி விரதம் கடைபிடித்து பூஜை செய்வது எப்படி...?
எளிதில் பணம் சம்பாதித்து அதை முறையாக காத்திட, உலக ஜீவராசிகளை பாதுகாத்து அருள் புரிந்து வரும் விஷ்ணு பகவானின் மனைவியான ஸ்ரீலட்சுமியை வழிபட வேண்டும். வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதன் மூலம் அவளின் அருள் கிடைத்து செல்வம் கொழிக்க பெறலாம். வரலட்சுமி விரதத்தை பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கடைப்பிடிக்கலாம்.
 
வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து குளித்து உடலை தூய்மைபடுத்தி கொள்வதோடு உள்ளத்தையும் தூய்மையக்கி கொள்ளவேண்டும். வீட்டின் பூஜை அறையில் கால் படாத இடத்தில் சுத்தமான ஒரு மரபலகையை வைத்து அதன் முன்பு கோலமிட வேண்டும். பலகையில் வாழை இலையை விரித்து அதில் பச்சரிசியை பரப்பி வைக்கவேண்டும். 
 
பின்னர் வெள்ளி அல்லது மஞ்சள் தடவிய நூலை செம்பில் சுற்ற வேண்டும். பின்னர் செம்பில் பச்சரிசி எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், 2 அல்லது 3 நாணயங்கள் ஆகியவற்றை போட்டு நிரப்ப வேண்டும். அந்த கலசத்தில் மேல் மஞ்சள் பூசிய தேங்காய் மற்றும் மாவிலக்களை  வைக்கவேண்டும். கலசத்தில் சுற்றி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் இட வேண்டும்.
 
இந்த கலசத்தை மரப்பலகையில் உள்ள பச்சரிசியின் மீது வைத்து பூ மாலை சாத்த வேண்டும். அதற்கு முன்பு வாழை இலையில் பாக்கு,  பழம், கொழுக்கட்டை ஆகியவற்றை வைக்க வேண்டும். கலசத்தின் இரு புறமும் குத்துவிளக்கேற்றி லட்சுமி தேவியை மனமுருகி வழிபட வேண்டும் கலசத்திற்கு கற்பூரம் காட்ட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த கலசத்தில் லட்சுமி தேவி வாசம் செய்து நமது  குடும்பத்துக்கு அருள் புரிவாள் என்பது ஐதீகம்.
 
பூஜை முடிந்ததும் அதில் கலந்து கொண்டவர்களுக்கு நிவேதன பொருள்களை வழங்கி மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு ஆகியவை தரவும். ஏழை-எளியோருக்கு அன்று முடிந்தவரை அன்னதானம் செய்யலாம். கலசத்தில் உள்ள மஞ்சள் கயிறை குடும்பத்தினர் கைகள் அல்லது  கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். 
 
பூஜை முடிந்ததும் கலசத்தை அரிசி இருக்கும் பாத்திரத்தில் வைத்தால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும். விரத தினத்தன்று மாலை கோவிலுக்கு சென்று வரலாம். இவ்வாறு வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்து சகல  பாக்கியங்களும் பெற அருள் புரிவாள்.