வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. க‌ல்‌வி
Written By Webdunia

கூடுத‌ல் க‌ட்டண‌ம் வசூ‌லி‌க்கு‌ம் ப‌‌ள்‌ளிக‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க பு‌திய ச‌ட்ட‌ம்

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதை தடுக்கவும், அவ்வாறு வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டிருக்கும் பெற்றோர், மாணவர்களின் நிலை குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விவாதத்தில் பங்கேற்று பே‌சிய எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ள், தரமான கல்வி வழங்குகிறோம் என்ற போர்வையில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களை கசக்கி பிழிந்து கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், இதனை தடுக்க சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள் ஆகியோரை கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினா‌ர்.

இதுபோன்ற கட்டணக் கொள்ளையை தடுக்க சமச்சீர் கல்வி முறையை கொண்டு வர வேண்டும் என்று‌ம் தனியார் பள்ளிகள் மட்டுமன்றி அரசு பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூடுதல் கட்டணமும், நன்கொடையும் வசூலிக்கப்படுவதாக தெரிவித்து இதனையும் அரசாங்கம் தடுக்க வேண்டும் என்று‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர்.

இத‌ற்கு பதிலளித்து பே‌சிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தனியார், அரசு பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தவுடனேயே அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

அரசு மற்றுமஅரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து இலவச சைக்கிள், இலவச பேரு‌ந்து ‌சீ‌ட்டு, இலவச சீருடை போன்றவற்றை வழங்கி இந்த அரசு கல்வியின் தரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வருவது கவலை அளிப்பதாக தெரிவித்த முதல்வர் கருணாநிதி அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். கல்வி கட்டணங்களில் எல்லா மாநிலங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது ஒரு மோகமாக நடந்து வருகிறது. அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்றதை குறிப்பிட்டு சொல்லலாம்.

அந்த அளவிற்கு நாம் நல்ல கல்வி வழங்கி வருகிறோம். இதனை மத்திய அரசும் பாராட்டியுள்ளது. சுயநிதி கல்வி நிறுவனங்கள் அவர்களே தங்கள் கல்வி கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதால் இந்த விடயத்தில் மாநில அரசு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்.

இப்போதும் கூட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைத்து பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் குறித்து கண்காணித்து வருகிறோம். 116 அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது விளக்கம் கேட்டு தா‌க்‌கீது அனுப்பி இருக்கிறோம். நிச்சயமாக பள்ளியின் அங்கீகாரம் ரத்து என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்த ஒரு குழு அமைப்பது, மீறினால் நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட ஷரத்துக்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்படும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு கைகட்டி வேடிக்கை பார்க்காது எ‌ன்று அமை‌ச்ச‌ர் தங்கம் தென்னரசு கூ‌றினா‌ர்.