வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By Webdunia

தேவயானி கோப்ரகடே ஒரு அசல் குற்றவாளி

நாட்டை அமெரிக்காவின் சுரண்டலுக்கு திறந்துவிட்டிருக்கும் இந்திய அரசும், அதிகார வர்க்கமும், தேவயானி விவகாரத்தில் அமெரிக்க எதிர்ப்பு போர் நடத்துவது போல குமுறி கொந்தளிப்பது ஒரு மோசடித்தனம்.
FILE


தேவயானி கோப்ரகடேயின் தந்தை உத்தம் கோப்ரகடே மகாராஷ்டிரா மாநில இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். மும்பையில் பிறந்து வளர்ந்த தேவயானி மவுண்ட் கார்மல் பள்ளியில் படித்து சேத் ஜி எஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார். மருத்துவராக பணி புரிவதை விடுத்து, அவரது உறவினரான 1985 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி அஜய் எம் கோண்டானேவின் ஆதரவில் 1999 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.

பாகிஸ்தான், இத்தாலி, ஜெர்மனி நாடுகளில் இந்திய தூதரகங்களின் அரசியல் பிரிவில் பணியாற்றிய பிறகு, பெரிதும் விரும்பப்படும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி நியமனம் பெற்றார்.

2012 ஆம் ஆண்டு நியூயார்க்கில் இந்திய தூதரகத்தின் அரசியல், பொருளாதாரம், வணிகம் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான துணைத் தூதராக நியமிக்கப்பட்டதும், அங்கு தனக்கு வீட்டு வேலை செய்வதற்காக ஆள் தேட ஆரம்பித்திருக்கிறார் தேவயானி.

சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண் மும்பையில் உள்ள தேவயானியின் வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார். அமெரிக்காவில் தனது வீட்டில் தங்கி குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் ஆள் தேடிக் கொண்டிருப்பதாகவும் ரூ.25,000 சம்பளமும், ரூ.5,000 ஓவர் டைம் ஊதியமாகவும் தருவதாக சொல்லியிருக்கிறார். சங்கீதாவின் வீட்டு வேலை செய்யும் திறனை மதிப்பிடும் விதமாக தேவயானி தனது வீட்டில் அவரை பல நாட்கள் வேலை வாங்கியிருக்கிறார்.

தூதரக பாஸ்போர்ட் பெறப் போவதாக சொல்லி சங்கீதாவின் சாதாரண இந்திய பாஸ்போர்ட்டை தேவயானி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

FILE
அக்டோபர் (2012) மாதம் சங்கீதாவின் சார்பாக தேவயானி அனுப்பிய விசா விண்ணப்பத்தில், சங்கீதாவுடன் பேசியிருந்த சம்பளத்துக்கு மாறாக, வீட்டு வேலைகள் செய்வதற்கான மாதச் சம்பளமாக சங்கீதாவுக்கு $4,500 (ரூ.2,70,000) வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். நவம்பர் 1 ஆம் தேதி விசா நேர்முகத்துக்கு சென்ற சங்கீதாவிடம் பணி ஒப்பந்தம் முதலான ஆவணங்களை கொண்டு வரும்படி கூறியிருக்கிறார் அமெரிக்க தூதரக அதிகாரி.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் விதிமுறைகளின் படி அமெரிக்காவில் பணிபுரிய நியமிக்கப்படும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் தமது தனிப்பட்ட ஊழியர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், அல்லது வேலையாட்களை அமெரிக்கா அழைத்து வருவதற்காக ஏ-3 விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்ப நடைமுறையின் போது வேலைக்கு அமர்த்தப்படுபவரை நேர்முகம் கண்டு, அவர் வேலை செய்யவிருக்கும் அமெரிக்க பகுதியில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக வாழ்வதற்கு போதுமான சம்பளம் அவருக்கு வழங்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதற்காக பணிக்கு அமர்த்தப்பபடுபவரும், பணிக்கு அமர்த்துபவரும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த ஒப்பந்தத்தில், என்ன வேலை செய்யப் போகிறார் (வீட்டு வேலை, தோட்ட வேலை, குழந்தைகளை பார்த்துக் கொள்ளுதல்) என்ற விபரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வேலை நேரத்தையும், ஒரு வாரத்துக்கு வேலை செய்யும் கால அளவையும் வரையறுத்திருக்க வேண்டும். வீட்டு வேலை செய்பவர்கள் வாரத்துக்கு 35 - 40 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரத்துக்கு குறைந்தது ஒரு நாள் விடுமுறையாக வழங்கப்பட வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுப்புகள், மருத்துவ விடுப்புகள், விடுமுறை விடுப்புகள் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

வேலைக்கான ஊதியம் அமெரிக்க மத்திய மற்றும் உள்ளூர் சட்டங்களின் படியான குறைந்த பட்ச ஊதியத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். தங்குமிடம், மருத்துவச் செலவு, மருத்துவக் காப்பீடு, பயணம், உணவு போன்றவற்றுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படக் கூடாது.

வழக்கமான வேலை நேரத்துக்கு அதிகமாக வேலை செய்தால் அந்த நேரத்துக்கு ஓவர் டைம் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். சம்பளம் ஊழியரின் வங்கிக் கணக்கில் போடப்பட வேண்டும். அந்த வங்கிக் கணக்கை வேலை கொடுப்பவரோ அவரது குடும்ப உறுப்பினர்களோ கட்டுப்படுத்தக் கூடாது. ஊழியரின் பாஸ்போர்ட், பணி ஒப்பந்தம் முதலான எந்த ஆவணத்தையும் வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது.

FILE
இந்த விதிகளின்படி தேவயானி ஒரு பணி ஒப்பந்தத்தை தயாரித்திருக்கிறார். அதன்படி சங்கீதா வாரத்துக்கு 40 மணி நேரம் மட்டும் வேலை செய்வார் என்றும், ஒரு மணி நேர வேலைக்கு $9.75 ஊதியம் (நியூயார்க் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம்) வழங்கப்படும் என்றும் விசா நேர்முகத்தில் சொல்லுமாறு தேவயானி சங்கீதாவுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். வேலை நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மதியம் 12 வரை, மாலை 6.30 முதல் 8.30 வரை சனிக்கிழமைகளில் காலை 8.00 முதல் மதியம் 1 மணி வரை என்று சொல்ல வேண்டும். ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் விடுமுறை வழங்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்க சட்டப்படி வழங்கப்பட வேண்டிய சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்கள், மருத்துவ விடுப்பு நாட்கள், ஆண்டு விடுமுறை விடுப்பு நாட்கள் போன்ற விபரங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. ரூ.30,000 சம்பளம் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் தேவயானி கூறியிருக்கிறார்.

இந்த பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேர்முகத்திற்கு பிறகு நவம்பர் 14, 2012 அன்று அமெரிக்க தூதரகம் சங்கீதாவுக்கு விசா வழங்கியிருக்கிறது.

நவம்பர் 23 ஆம் தேதி விமான நிலையத்துக்கு போவதற்கு முன்பு சங்கீதாவையும் அவரது கணவர் பிலிப்பையும் தனது வீட்டுக்கு அழைத்த தேவயானி சங்கீதாவை இன்னொரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட சொல்லியிருக்கிறார். அதன்படி சங்கீதாவுக்கு ரூ 25,000 மாதச் சம்பளமும், ஞாயிற்றுக்கிழமைகளிலும், கூடுதல் நேரங்களிலும் வேலை செய்வதற்கு ரூ.5,000 ஓவர்டைம் ஊதியமும் வழங்கப்படும். சம்பளமும் ஓவர்டைமும் சேர்த்து ரூ 30,000-ஐ தாண்டக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதைத் தவிர்த்து வேலை நேரம், வார வேலை நேர வரம்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்கள், விடுமுறை விடுப்பு நாட்கள் பற்றி இந்த ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தூதரக விசா விதிகளின்படி இப்படி செய்வது அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமானது.

நவம்பர் 24 ஆம் தேதி தேவயானியும், சங்கீதாவும் நியூயார்க் போய் சேர்கின்றனர். நவம்பர் முதல் ஜூன் வரை தேவயானியின் வீட்டில் வேலை செய்த சங்கீதா 40 மணி நேர வரம்பை விட பெருமளவு அதிக நேரம் வேலை (ஒரு நாளுக்கு 18 மணி நேரம் வரை) செய்திருக்கிறார். அவருக்கு ஒத்துக் கொண்ட ரூ 30,000-ஐ விட குறைவாகவே சம்பளமே கொடுக்கப்பட்டிருக்கிறது. போகப்போக வேலைச் சுமையும், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காததும் தாங்க முடியாமல் ஆகியிருக்கிறது.

தனது வாராந்திர ஓய்வு நாளில் வெளியில் வேலை செய்யப் போவதாக அனுமதி கேட்டிருக்கிறார் சங்கீதா. "தூதரக விசா விதிகளின்படி அப்படி செய்வது அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமானது" என்று அதை தடை செய்திருக்கிறார் தேவயானி. தனக்கு சாதகமாக இருந்தால், அமெரிக்க சட்டங்களை மீறி குறைந்த சம்பளம் கொடுக்கலாம், அதிக நேரம் வேலை வாங்கலாம், விசா விண்ணப்பத்தில் பொய்யான தகவல்களை கொடுக்கலாம், அமெரிக்க தூதரக அதிகாரியிடம் பொய் சொல்லும்படி கற்றுக் கொடுக்கலாம். ஆனால், சங்கீதா ஒரு நாள் வெளியில் வேலை செய்தால் அமெரிக்க சட்டம் மீறப்பட்டு விடும் என்ற அவரது அக்கறை பச்சை சுயநலமே அன்றி வேறென்ன?

ஜூன் மாதம் பொருட்கள் வாங்க கடைக்குப் போன சங்கீதா வீட்டுக்குத் திரும்பவில்லை. ஜூலை 8 ஆம் தேதி சங்கீதா நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞரின் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்திய தூதரகத்திலிருந்து 4 அதிகாரிகள் அங்கு போய் சேர்ந்திருக்கின்றனர். பேச்சு வார்த்தையின் போது தான் செய்த வேலைக்கான சம்பளமாக ஒரு தொகையையும், தனது சாதாரண இந்திய பாஸ்போர்ட்டையும் தந்துவிடும்படி சங்கீதா கேட்டிருக்கிறார்.

இதற்கிடையில் தேவயானியின் தந்தையான ஐஏஎஸ் அதிகாரியின் செல்வாக்கில் இந்தியாவில் சங்கீதாவின் கணவர் பிலிப்பும் குழந்தையும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து அவர்களுடன் தொலைபேசியில் பேசிய சங்கீதா, வழக்கறிஞர் அலுவலகத்தை விட்டு போக மறுத்திருக்கிறார். இந்திய தூதரக அதிகாரிகள் அவர் வெளிவருவதை எதிர்பார்த்து காத்திருந்திருக்கின்றனர். பின்னர், அமெரிக்க காவல்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டு அவர்கள் சங்கீதாவை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அதே நாளில் இந்திய அரசு சங்கீதாவின் இந்திய பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறிவிட்ட அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் படி அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்தது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேவயானி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முறையீட்டின் அடிப்படையில் தேவயானிக்கு எதிராக இந்தியாவிற்கு வெளியில் எந்த வழக்கும் தொடரக் கூடாது என்று சங்கீதாவுக்கு தடை விதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. சங்கீதாவின் கணவர் பிலிப்புக்கும் சம்மன் அனுப்பியது நீதிமன்றம். சங்கீதா மீது இந்தியக் குற்றப் பிரிவு 387, 420 மற்றும் 120B-ன் கீழ் தெற்கு டெல்லி மாவட்டத்தின் மாநகர போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது வாரண்ட் பிறப்பித்தது. சங்கீதா இந்தியா திரும்பினால் அவர் உடனே கைது செய்யப்படுவார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு தேவயானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. நியூயார்க் நகரின் நீதித்துறை தலைவர் பிரீத் பராரா தேவயானியை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார். டிசம்பர் 12 ஆம் தேதி தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பும் போது, அவரை அமெரிக்க அரசு மார்ஷல்கள் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

தேவயானியை அவரது குழந்தைகள் முன்பு கைது செய்த்தாகவும், கை விலங்கு இட்டு அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. போதை மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடனும், பாலியல் குற்றவாளிகளுடனும் சேர்த்து வைத்திருந்ததாகவும், நிர்வாணமாக்கி சோதனை செய்ததாகவும் தேவயானி குற்றம்சாட்டியிருக்கிறார். தனக்கு தூதரக ஊழியர்களுக்கான விதி விலக்கு இருப்பதாக பல முறை கூறியும் அமெரிக்க அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை என்று தேவயானி கூறியிருக்கிறார்.
FILE

நியூயார்க் நகர நீதித் துறை அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா (இவர் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்), “தேவயானி குழந்தைகள் முன்பு கைது செய்யப்படவில்லை. அவருக்கு கை விலங்கு இடப்படவில்லை. அவரது தொலைபேசி கைப்பற்றப்படவில்லை. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பல இடங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள அனுமதித்திருக்கின்றனர். தமது காரில் அமர வைத்து தொலைபேசி அழைப்புகளை செய்ய ஏற்பாடு செய்த காவலர்கள், அவருக்கு காபி கொண்டு கொடுத்ததுடன், சாப்பிடுவதற்கான உணவும் வாங்கித் தருவதாக கூறியிருக்கின்றனர். அமெரிக்க காவல்துறை நடைமுறையின்படி தேவயானி தனி அறையில் ஒரு பெண் அதிகாரியால் முழுமையாக சோதனை செய்யப்பட்டார். தனக்கோ, சக கைதிகளுக்கு ஊறு விளைவிக்கும்படியான எந்த பொருளையும் உடலில் மறைத்து வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சோதனை செய்யப்பட்டது” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இது இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் கர்ஜித்திருக்கிறார்கள். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவை சந்திப்பதற்கு நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் மறுத்திருக்கிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் அவர்களை பார்க்க மறுத்திருக்கின்றனர். இந்திய தூதரகப் பெண் ஒருவருக்கு அமெரிக்காவில் இழைக்கப்பட்ட அநீதியைத் தொடர்ந்து தான் இந்த நிலையை எடுத்ததாக மோடி டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் இந்தியத் தூதர் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு சலுகைகளை ரத்து செய்திருக்கிறது இந்திய அரசு. அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் சிறப்பு தூதரக அடையாள அட்டைகளை திரும்பக் கொடுத்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க தூதரகங்கள் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு மதுவகைகள் இனிமேல் அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்திருக்கிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு விமான நிலைய அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்க தூதரகங்களில் பணி புரியும் இந்திய ஊழியர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் இவற்றின் விபரங்களை கேட்டிருக்கிறது மத்திய அரசு. இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணி புரியும் ஊழியர்களின் பட்டியலையும் கேட்டிருக்கிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மனைவி/கணவர் முறையான பணி விசா இல்லாமலேயே பள்ளிகளில் பணி புரிவது இது வரை இந்திய அரசுக்கு தெரியாதாம்.
FILE

அமெரிக்க குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் தேவயானி கைது செய்யப்பட்டது போலவே, இந்தியாவில் அமெரிக்க தூதரக ஊழியர்களின் "துணைவர்களாக" விசா வழங்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையை தடை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
"நூறு டாலரை விட்டெறிந்தால், நம் வீட்டு வேலைகளை எல்லாம் செய்து, காலடியில் உத்தரவுக்கு காத்திருக்கும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் கிடைப்பது தெற்கு ஆசியாவின் வரம். ஒரு சுல்தானைப் போல வாழ்வதற்கு உலகில் வேறு எந்த இடத்திலும் சாத்தியமில்லை".

இந்தியாவுக்கு வரும் மேற்கத்திய நடுத்தர வர்க்கத்தினரின் புகழுரை இது. வீட்டு வேலைகளை எல்லாம் செய்து, குழந்தையை பார்த்துக் கொண்டு, மிஞ்சியிருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, கொடுத்த இடத்தில் தூங்கிக் கொண்டு வீட்டோடு வேலை செய்யும் பெண் என்பது இந்திய நடுத்தர வர்க்கத்தின், குறிப்பாக வட இந்தியர்களின் கனவு வாழ்க்கையின் ஒரு இன்றியமையாத பகுதி. ஓய்வு நேரம், வார இறுதி, வருடாந்திர விடுமுறை என்பதெல்லாம் தேவைப்படாத உழைக்கும் செக்கு மாடுகள் போல பயன்படுத்தப்படும் வர்க்கம் அது.

சம்பளத்தைக் கூட மொத்தமாக பின்னர் கொடுத்தால் போதும். பண்டிகை, திருமணம் என்று வரும் போது ஒரு புடவை வாங்கிக் கொடுத்து அடிமையை மகிழ்விப்பதோடு ஆண்டைகளின் கடமை முடிந்து விடுகிறது. "குறைந்த பட்சம், இங்கே நல்ல சாப்பாடாவது கிடைக்கிறது. கிராமத்தில் இருந்தா அரைப் பட்டினியாக இருந்து கஷ்டப்படக் கூடியவங்களுக்கு இது சொர்க்கம்" என்று தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறவர்கள் இந்த நவீன ஆண்டைகள்.

இந்த நவீன ஆண்டைகளின் பிரதிநிதிதான் இந்திய தூதரக அதிகாரி தேவயானி. வட இந்திய ஊடகங்களிலும், நாடாளுமன்றத்திலும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களின் அறிக்கைகளிலும், இணையத்திலும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிலையங்களிலும் தேவயானிக்காக வெளிப்படும் தேசப்பற்றை இந்த பின்னணியிலிருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது 'தேச'த்தில் சங்கீதாக்களுக்கு உரிமை இல்லை.
FILE

கையால் மலம் அள்ளுவதை கடவுளுக்கு செய்யும் தொண்டு என்று கருத்துத் தெரிவித்த மோடி போன்றவர்களுக்கு சங்கீதாக்கள் தமது ஆண்டைகளுக்கு சேவை செய்யும் இந்து கர்ம யோகத்திலிருந்து பிறள்வது மன்னிக்க முடியாத குற்றம்தான். அதற்காக சங்கீதாவை தண்டிப்பது, அவரது கணவரையும் குழந்தையையும் கைது செய்வது, அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பது தேவயானிகளின் பிறப்புரிமை. சங்கீதாவின் சார்பில் அமெரிக்க நீதித்துறை தேவயானியை கைது செய்வது இந்திய தேசப் பெருமைக்கு கொடுக்கப்பட்ட அடி. தேவயானி மீதான வழக்கின் முக்கிய சாட்சிகளான சங்கீதா குடும்பத்துக்கு அமெரிக்கா விசா வழங்கி அமெரிக்காவில் புகலிடம் கொடுப்பது இந்திய தேசத்துக்கு எதிரான நடவடிக்கை. இதுதான் இந்திய தேசபக்தி.
மன்மோகன் சிங்கின் ஹோட்டல் அறை முதல், இந்தியத் தூதரின் பாத்ரூம் வரை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பது பிரச்சனையில்லை. ஆனால் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமை ஒப்பந்த்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்று அமெரிக்கா மிரட்டிய போதும், வால்மார்ட்டை திறந்தே ஆக வேண்டுமென்று கொலை மிரட்டல் விட்ட போதும் அதை தலைமேல் ஏற்றுக் கொண்டு அனுமதித்ததும் இந்த தேசபக்தர்களின் தேசபக்திக்கு ஒரு சான்று. இவையெல்லாம் நாட்டின் இறையாண்மை, சுயமரியாதை, ஆக்கிரமிப்பை எதிர்ப்பதாக இவர்களுக்கு கொஞ்சம் கூட தோன்றவில்லை.

இந்த ஆதாரங்களை ஸ்னோடன் வெளியிட்ட போது, இந்த தேச பக்தர்கள் வாலை சொருகிக் கொண்டார்கள். இதெல்லாம் ஊர் உலகத்தில் நடக்காத்தா என்ன என்று அசடு வழிய அடிமைத்தனத்தை நியாயப்படுத்தினார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும் போதும், கைது செய்து அழைத்துச் செல்லும் போதும் இவர்களின் தேசபக்தி காணாமல் போயிருந்தது. இன்னும் சிங்கப்பூரில் கைது செய்யப்படும் இந்திய தொழிலாளிகள், வளைகுடா நாடுகளில் வதைபடும் இந்தியர்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தாலும் இந்திய அரசோ இல்லை, இந்த தேசபக்தர்களோ மூச்சு கூட விடுவதில்லை.

FILE
இந்தியப் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது குறித்த இவர்களது ஆவேசம் சத்தீஸ்கரில் சோனி சோரி என்ற பழங்குடி பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, அவரது பிறப்பு உறுப்பிலும், ஆசன வாயிலும் கற்கள் சொருகப்பட்ட போது அவர்களது தேசபக்தி பூஜை அறைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்திருக்கிறது.

எனவே தேசபக்தியிலும் கூட வர்க்கம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தேவயானிக்கு ஆதரவாக எழுப்பப்படும் குரல் மேட்டுக்குடியின் நலனை முன்வைத்து மட்டும் பேசுகிறது. அதனால்தான் இங்கே சங்கீதா வில்லியாக உருவாக்கப்படுகிறார். இவர்களது தேசபக்தியில் உழைக்கும் மக்களுக்காக, அடித்தட்டு மக்களுக்காக பொங்காது.

தேவயானிக்கு ஆதரவாக பேசுபவர்கள் குறிப்பிடும் ஒரு பாயிண்ட், அவர் தலித் என்பது. மாயாவதி கூட அப்படித்தான் அமெரிக்காவை கண்டித்திருக்கிறார். ஐஏஎஸ் அப்பாவுக்கு பிறந்து டாக்டர் படிப்பு படித்து, ஐஎப்எஸ் முடித்து துணைத் தூதராக வேலை செய்யும் தேவயாணி வாழ்வில் தலித் என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடையாளம் எங்கே இருக்கிறது? காலங்காலமாக ஒடுக்கப்பட்டு, அடிமைச் சமூகமாக இழிவுகளை சுமந்து வாழும் தலித் சமூகத்திலிருந்து முன்னேறிய பெண் ஒரு தொழிலாளியை படுத்திய பெண்ணை தலித் என்று அழைத்து மரியாதை செய்வது உண்மையில் தலித் மக்களை அவமதிப்பது ஆகும்.

அடுத்து தேவயானிக்கு வியன்னா உடன்படிக்கையின் படி தூதராக கருதப்பட்டு கைது செய்யப்பட்டிருக்க கூடாது என்கிறார்கள். தூதரக நடவடிக்கைகள் மட்டுமே வியன்னா உடன்படிக்கையில் வரும். இங்கே தேவயானி செய்திருப்பது சட்டத்தை ஏமாற்றுவது, ஒரு தொழிலாளரை சுரண்டுவது ஆகிய கிரிமினல் குற்றங்களாகும். தூதரகத்தில் வேலை செய்யும் ஒருவன் பாலியல் வன்முறையோ இல்லை கொலையோ செய்து விட்டால் அவனுக்கு விலக்கு உண்டு என்று வாதிட முடியுமா என்ன?

அடுத்து கைவிலங்கு, நிர்வாண சோதனை என்று மானம் போய்விட்டதாக பேசுகிறார்கள். இந்தியாவில் கூட போலிசால் கைது செய்யப்படும் நபர் நீதிமன்ற காவலுக்கு முன்னர் காவல் நிலைய லாக்கப்பில் வெறுமனே ஜட்டியுடன்தான் தங்க வைக்கப்படுவார். காரணம் அந்த நபர் இதர உடைகளை வைத்து தற்கொலைக்கு முயலக் கூடாது என்பதுதான். இப்படித்தான் அமெரிக்காவில் கைவிலங்கும், உடை களைந்த சோதனையும் போடுகிறார்கள். இதில் என்ன தவறு?

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்திய அரசின் கோரிக்கை என்ன? நீங்கள் கொள்ளையடிக்க எங்கள் நாட்டை உங்களுக்கு திறந்து விடுகிறோம், ஆனால் எங்கள் அதிகாரிகளை கொஞ்சம் மதிப்போடு நடத்துங்கள் என்பதே. இதைத்தாண்டி இந்திய அரசுக்கோ இல்லை மேட்டுக்குடிக்கோ துளியளவும் தேசபக்தியோ இல்லை சுயமரியாதையோ கிடையவே கிடையாது.

நாட்டை அமெரிக்காவின் சுரண்டலுக்கு திறந்துவிட்டிருக்கும் இந்திய அரசும், அதிகார வர்க்கமும், தேவயானி விவகாரத்தில் அமெரிக்க எதிர்ப்பு போர் நடத்துவது போல குமுறி கொந்தளிப்பது ஒரு மோசடித்தனம்.

நன்றி: வினவு தளம்