1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 3 ஜூலை 2014 (21:20 IST)

ஜூலை.4 இளவரசன் முதலாமாண்டு நினைவு அஞ்சலி: திரும்பிப் பார்ப்போம் (ஒரு தொகுப்பு)

2012 ஆம் ஆண்டு இளவரசன் என்ற தலித் இளைஞரும், திவ்யா என்ற வன்னியர் வகுப்பைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் மனமுடைந்த திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வன்னியர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் இளவரசனின் சொந்த ஊரான நாயக்கன்கொட்டாயில் உள்ள நத்தம் காலணி உள்ளிட்ட தலித் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை அடித்து நொருக்கி தீயிட்டுக் கொளுத்தினர்.


 
தலித் மக்களின் வீடுகள் வன்னியர்களால் சூறையாடப்பட்டு, பணம், நகை உள்ளிட்ட உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வண்டி, வாகனங்கள் எரிக்கப்பட்டன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சில மணி நேரங்களில் அழிக்கப்பட்டது. இவ்வளவு வன்முறைக்கும் காரணம் ஒரு ஜாதி மறுப்பு திருமணம் தான் என்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 
இவ்வளவு வன்முறைக்கு பிறகும் 6 மாதங்கள் இளவரசன் - திவ்யா ஜோடி உறுதியாகதான் இருந்தார்கள். முற்போக்கு சக்திகள், சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் என அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர்.
 
சில மாதங்களுக்கு பிறகு, திவ்யாவின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், திவ்யாவை பார்க்க வேண்டும் என்றும் தகவல் வந்தது. அதை அறிந்த இளவரசன் தானே முழு மனதுடன் திவ்யாவை தனது அம்மாவைப் பார்க்க அனுப்பி வைத்தார். ஆனால் போன திவ்யா வரவே இல்லை.
 
இளவரசன் தனது மனைவி திவ்யாவை மீட்டு தரும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றத்தில் திவ்யா, தான் இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை எனவும், தனது தாயுடன் தான் வாழ விரும்புவதாகவும் கூறி இளவரசனை மட்டுமல்ல இந்த வழக்கை கவனித்து வந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
 
இந்த வழக்கு முடிவடைந்தவுடன், வேதனையுடன் ஊருக்கு திரும்பிய இளவரசன் தர்மபுரி அருகே உள்ள இரயில் பாதையில் பிணமாகக் கிடந்தார். என்ன நடந்தது. எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனை, மறு பிரேதப் பரிசோதனைகள் நடத்திய பிறகும் சிலர் இது திட்டமிட்ட கொலை என்றும், சிலர் இளவரசன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறி வருகிறார்கள்.
 
எப்படியிருந்தாலும், காதலுக்காக உயிரையே இழந்த இளவரசன்; தமிழகத்தின் காதல் இளவரசன் மட்டுமல்ல. சமூக மாற்றத்தை விரும்புவோரின் அடையாளம்!