அதிக வயதில் ஐசிசி தரவரிசையில் முதலிடம்… சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.
ஆனால் அதற்கான சூழல் இந்திய அணியில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். இதனால் அவர் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் வரை விளையாடுவார் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் ரோஹித் ஷர்மா. இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் அதிக வயதில் முதலிடம் பிடித்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் 38 வயது 73 நாட்களில் முதலிடத்து செல்ல, ரோஹித் 38 வயது 182 நாட்களில் முதலிடத்துக்கு சென்றுள்ளார்.