1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (18:17 IST)

புஜாரா, ரஹானே சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி

கொழும்பில் இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்துள்ளது.


 

 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி தலைமையிலான  இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலங்கையை எளிதில் வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் அட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 35 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி தொடக்கத்திலே முதல் விக்கெட்டை இழந்தது. 
 
அடுத்து களமிறங்கிய புஜாரா ராகுலுடன் இணைந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின் ராகுல் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி 13 ரன்களில் வெளியேறினார்.
 
இதையடுத்து துணை கேப்டன் ரஹானே களமிறங்கினார். புஜாரா, ரஹானே இருவரும் சேர்ந்து நிலைத்து ஆடினர். இருவரும் சதத்தை கடந்தனர். மேலும் இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். புஜாரா 128 ரன்களுடனும், ரஹானே 103 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.