சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்
தன் அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை பட நிறுவனம் பயன்படுத்தக் கூடாது. அதற்கு மீறி பயன்படுத்தினால் இழப்பீடு தர வேண்டும் அல்லது படத்தில் இருந்து பாடல்களை நீக்க வேண்டும் என்றெல்லாம் சமீப காலமாக இளையராஜா கூறி வருகிறார். ஆனால் அதையும் மீறி ஒரு சில படங்களில் இளையராஜாவின் பாடல்களை அவருடைய அனுமதியின்றி பயன்படுத்தி வந்தனர்.
குறிப்பாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் அவருடைய காப்பி ரைட்ஸ் பிரச்சனை பூதாகரமாக கிளம்பியது. அந்த பட நிறுவனமும் இளையராஜாவும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அந்த பிரச்சனையை எப்படியோ பேசி முடித்தார்கள். அதற்கு அடுத்தபடியாக குட் பேட் அக்லி திரைப்படத்திலும் இளையராஜா அனுமதியின்றி மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.
அந்த படமும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு தான் இளையராஜா தன் அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்தி இருக்கிறார்கள் என நீதிமன்றத்தை நாடினார். அது மட்டுமல்ல ஏழு நாட்களுக்குள் மன்னிப்பும் கோர வேண்டும் என்றும் இளையராஜா தரப்பில் இருந்து கூறப்பட்டது. அந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது தன் அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்தக் கூடாது என சொல்வதற்கு இளையராஜாவுக்கு உரிமை உள்ளது. இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கூறிய மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இந்நிலையில் டியூட் படத்திலும் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் டியூட் படத்தில் அவருடைய பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு படத்தில் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படும் என்றும் பட நிறுவன ம் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால் இளையராஜா தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.