வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. நம்பினால் நம்புங்கள்
  4. »
  5. கட்டுரை
Written By Webdunia
Last Updated : புதன், 19 பிப்ரவரி 2014 (01:46 IST)

பகவான் புட்டபர்த்தி சாய்பாபா!

webdunia photoWD
லிங்கத்தை வரவழைத்துத் தருவது, தன்னிடம் ஆசி பெறும் பக்தர்களுக்கு விபூதியை வரவழைத்து அளிப்பது என்று பல விந்தைகளை புரியும் புட்டபர்த்தி சாய்பாபாவை உலகின் ஆன்மீகத் தலைவராக ஏற்றுக்கொண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவர் வழி நடக்கின்றனர்.

அவர் நிகழ்த்திய அதிசயங்களைப் பற்றி அவருடைய பக்தர்கள் பலவற்றைக் கூறியுள்ளனர்.

தங்களுக்கு ஏற்பட்ட நோயினால் ஏற்படும் வலியை பாபா ஏற்றுக்கொண்டு நிவாரணம் அளிப்பதாக சில பக்தர்கள் கூறினர். சிலர், தங்களுக்கு உணவு, மோதிரம், நகை, கைக்கடிகாரங்கள் என்று பல பொருட்களை பாபா வரவழைத்துக் கொடுத்ததாகக் கூறுகின்றனர்.

காற்றில் மிதக்கக் கூடியவர், ஒரு இடத்தில் இருந்துகொண்டே மற்றொரு இடத்தில் காட்சி அளிப்பவர், மாயமாய் மறைந்துவிடுபவர், கருங்கலை சுவைக்கும் இனிப்பாக மாற்றுபவர், தண்ணீரை பெட்ரோலாக மாற்றக் கூடியவர், கேட்கும் பொருள் எதுவானாலும் அதனை வரவழைத்துக் கொடுப்பவர் என்றெல்லாம் சாய்பாபாவைப் பற்றி கூறுகின்றனர்.

இதுமட்டுமின்றி, தட்பவெப்ப நிலையை மாற்றியுள்ளார், தன்னுள் இருந்து ஒளியை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார் என்றெல்லாம் பாபாவைப் பற்றி பெருமையாக பக்தர்கள் குறிப்பிட்டாலும், அவர் செய்வதெல்லாம் சாதாரண மேஜிக்தான் என்று அவ்வப்போது சில இதழ்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றன.

webdunia photoWD
சாதாரணப் பொருளைத் தங்கமாக்கி சாய்பாபா நிகழ்த்திய அதிசயத்திற்கு எதிராக அவர் மீது தங்க கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்கு கூட தொடரப்பட்டது. ஆனால், அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

ஆயினும், இயற்கையையும் தாண்டிய அபார சக்தி சாய்பாபாவிடம் உள்ளது என்று அவரது பக்தர்கள் நம்புகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள், நிலவில் நான் தோன்றுவேன் என்று சாய்பாபா அறிவித்ததாகவும், அந்த நிகழ்வைக் காண ஏராளமான பொதுமக்கள் உள்ளூர் விமான நிலையத்தில் திரண்டனர் என்றும், ஆனால் அப்போது மேகம் தோன்றி நிலவை மறைத்துவிட்டதால் அவர் கூறியது போல நடக்கவில்லை என்றும், இதனால் ஏமாற்றமடைந்த மக்களை தடியடி நடத்தி காவல் துறையினரால் கலைக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து சாய்பாபா டிரஸ்ட் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஆனால், சாய்பாபா தன்னைப் பற்றியும், மற்றவர்கள் பற்றியும் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

"நான் கடவுள், நீங்களும் கடவுள்தான். நான் அதனை அறிந்துள்ளேன், நீங்கள் அதனை சுத்தமாக உணரவில்லை. அதுவே எனக்கும், உங்களுக்கும் உள்ள வேறுபாடு"