வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (05:52 IST)

பிச்சை எடுப்பவர்களையும் வாக்காளர்களாக பதிவு செய்ய நடவடிக்கை

இலங்கையில் பிச்சை எடுப்பவர்களையும் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
 

 
வறுமை காரணமாகவும், வசதியற்ற நிலை காரணமாகவும் வீடுகளின்றி தெருக்களில் வசித்து பிச்சையெடுத்து வாழ்பவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் அவர்களுக்கும் ஜனநாயக உரிமை இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
இதே போல் ஆதிவாசிகளாகிய வேடர்களையும் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
 
அது மட்டுமல்லாமல், யுத்த மோதல்கள் காரணமாக புலம்பெயர்ந்து வாழ்பவர்களையும் வாக்காளார்களாக பதிவு செய்து அவர்கள் தேர்தல்களில் வாக்களிக்கத்தக்க வகையில் தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
புலம் பெயர்ந்திருப்பவர்கள், வெளிநாடுகளில் தொழில் செய்பவர்கள் போன்ற தற்காலிகமாக நாட்டைவிட்டு வெளியேறியிருப்பவர்கள் தேர்தல் திணைக்களத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.