வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 17 டிசம்பர் 2014 (19:37 IST)

பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: நவாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உறுதியளித்துள்ளார்.
 
பெஷாவரில் நேற்று-செவ்வாய்கிழமை 140க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் முக்கியக் கூட்டத்துக்குப் பிறகு நவாஸ் ஷெரீஃப் இதை அறிவித்தார்.
 
அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், உயிரிழந்த சிறார்களின் தியாகம் வீணாகக் கூடாது என்பதில் நாடு முழுவதும் ஒத்த கருத்துடன் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இதனிடையே தங்களுக்கு எதிராக இராணுவத்தினர் முன்னெடுக்கும் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடியாகவே அந்தப் பள்ளிக்கூடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று தாலிபான்களின் பேச்சாளர் கூறியுள்ளார்.
 
எனினும் தாக்குதலாளிகளுக்கு மூத்த மாணவர்களை மட்டுமே கொலை செய்யுமாறு உத்தரவிட்டிருந்ததாகவும், சிறார்களைத் தாக்கக் கூடாது எனக் கூறப்படிருந்ததாகவும் தாலிபான் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 
பெஷாவரில் பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானில் மூன்று நாள் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
 
இந்தியாவிலும் இறந்த மாணவர்களின் நினைவாகப் பள்ளிக்கூடங்களில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
இதனிடையே நாட்டில் மீண்டும் தூக்கு தண்டனையை அறிமுகப்படுத்துவதாகவும் பிரதமர் நவாஷ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
 
தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் இந்தத் தண்டனை மீண்டும் அளிக்கப்பட வழி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தத் தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் நாட்டில் அதிகரித்து வரும் வேளையில், பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் அறிவிப்பு வந்துள்ளது.