1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Tamilarasu
Last Updated : ஞாயிறு, 11 ஜனவரி 2015 (18:54 IST)

மஹிந்த இராணுவ உதவி கோரியது குறித்து விசாரணை

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் தோற்றுவிட்டதை அறிந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இராணுவத்தை களத்தில் இறக்க முயன்றார் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளர் ரஜித சேனரட்ண குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இந்தத் தேர்தலில் தான் தோற்றுவிட்டதை ஏற்றுக்கொள்வதாக மஹிந்தராஜபக்‌ஷ பகிரங்கமாக அறிவிப்பதற்கு முன்னர், இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக மீது பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று மஹிந்தராஜபக்ஷவின் சார்பில் பேசவல்ல மோஹன் சமரநாயக மறுத்திருக்கிறார். அப்படியான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இலங்கை இராணுவத்தின் சார்பில் எந்தக்கருத்தும் வெளியாகவில்லை.

ராணுவத்தைக் களத்தில் இறக்கும்படி ராணுவத்தின் தலைமைத் தளபதிக்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் சட்டவிரோத காரியம் எதையும் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார் என்று ரஜித சேனரட்ண கூறினார்.

“கடைசி நிமிடம் வரை அவர் (மஹிந்த) அதிபராக தொடரவே முயன்றார். ஆனால் கடைசியில் தனக்கு வேறு வழியில்லை என்று தெரிந்தபிறகே அவர் அதிபர் மாளிகையைவிட்டு வெளியேறினார்” என்றார் ரஜித சேனரட்ண.

இராணுவத்தின் தலைமைத் தளபதியை மஹிந்த ராஜபக்ஷவே நேரடியாக தொடர்பு கொண்டாரா அல்லது தனது இளைய சகோதர்ரும் இராணுவத்தின் முன்னாள் செயலர்ருமான கோதாபய ராஜபக்ஷ மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்கிற விவடங்களை சேனரட்ண விவரிக்கவில்லை.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மறுக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் பேசவல்ல மோஹன் சமரநாயக, ஜனவரி 9ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கே தேர்தல் முடிவுகள் குறித்து மதிப்பீடு செய்த மஹிந்த ராஜபக்ஷ அப்போதே இந்த தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்துவிட்டார் என்று விளக்கமளித்தார்.

உடனடியாக தனது அனைத்து செயலாளர்களிடமுமே ஆட்சிமாற்றமும் அதிகார கையளிப்பும் சுமுகமாக நடக்கவேண்டும் என்பதற்கான உத்தரவுகளை அவர் பிறப்பித்தார் என்று தெரிவித்த மோஹன் சமரநாயக, தற்போது இந்த குற்றச்சாட்டுக்களை கூறும் அரசியல்வாதி அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கூறுவதை வாடிக்கையாக கொண்டவர் என்றும் விமர்சித்தார்.

இலங்கையில் 1962 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சிக்கு எதிராக நடந்த இராணுவ சதி தோல்வியில் முடிந்தது. அதற்குப்பிறகு, இலங்கை அரசில் இராணுவம் இதுவரை நேரடியாக தலையிட்டதில்லை.