வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2020 (17:46 IST)

ஜிடிபி முடிவுகள்: இந்திய பொருளாதாரம் மந்தநிலை நோக்கிச் செல்லுமா?

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, 2020 - 21 நிதி ஆண்டுக்கான, இரண்டாவது காலாண்டு ஜிடிபி எண்களை அடுத்த சில மணி நேரங்களில் இந்தியா பார்க்கவிருக்கிறது.
 
இரண்டு மாத கடுமையான பொது முடக்கத்துக்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட பொருளாதாரம், தொழில்கள் எப்படி செயல்பட்டு இருக்கின்றன என்பதை இரண்டாவது காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் பதிவான ஜிடிபி தரவுகள் கூறவிருக்கின்றன.
 
இந்த இரண்டாவது காலாண்டிலும் இந்திய பொருளாதார செயல்பாடுகள் கீழ்நோக்கியே இருக்கும் என கணிப்புகள் கூறுகின்றன. அப்படி இருந்தால், இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதாகவே கொள்ளலாம்.
 
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி இறங்குமுகமாக இருந்தாலும் அது சில நம்பிக்கைகளை தருகின்றன. அவை பார்ப்பதற்கு முன், கடந்த காலாண்டில் இந்திய பொருளாதாரம் எவ்வளவு பலமான வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது? அது மீண்டு வருவது என்பது, எவ்வளவு நீண்ட மற்றும் கடினமான பயணம் இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
 
ஒரு காலத்தில் பிரமாதமான வளர்ச்சியைக் கண்டு கொண்டிருந்த இந்திய பொருளாதாரம், கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலாண்டில் பொதுமுடக்கத்தால், சுமார் 24% சரிந்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் காணாத மிகப் பெரிய வீழ்ச்சி. ஜி20 நாடுகளிலேயே இந்தியா கண்ட மிக மோசமான ஜிடிபி சரிவு இதுதான்.
 
இந்தியாவின் முக்கிய துறைகளான கட்டுமானம் 50% மற்றும் உற்பத்தி சுமாராக 40% வரை வீழ்ந்தன. இந்த துறைகள் தான் இந்தியாவில் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
 
நுகர்வு தான் இந்திய பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய அளவில் (சுமாராக 60%) பங்களிக்கும் துறை. இது பாதிக்கு பாதியாக சரிந்தது. வருமான வீழ்ச்சி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மக்கள் செலவழிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். வியாபாரங்கள் தங்கள் முதலீடுகளைக் குறைத்துக் கொண்டன. மொத்த சுழற்சியும் நிறைவடைந்தது.
 
வளர்ச்சிக்கு வழிவகுத்த முக்கிய துறைகள்
ஜூன் மாதத்தில், மீண்டும் பொருளாதாரம் இயங்கத் தொடங்கிய நிலையில், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகள், இந்திய பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதாகத் தெரிகிறது.
 
வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது அதிகரித்துக் கொண்டு இருப்பதால், மக்கள் தங்களுடைய வீட்டின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து இருக்கிறார்கள். பணவீக்கத்தோடு கணக்கிட்டால், கடந்த 2 - 3 ஆண்டுகளாக, வீடுகளின் விலை ஏற்றம் காணவில்லை, எனவே வீடுகளின் விலை குறைந்து இருக்கிறது என்கிறார் கட்டுமான துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, ஹீராநந்தனி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் ஹீராநந்தனி.
 
வீட்டை வாடகைக்கு விடுபவர்கள், தங்களின் வீட்டை தாங்களே வைத்துக் கொண்டால் நல்லது என நினைக்கத் தொடங்கி இருப்பதாக கட்டுமானத் துறை சார்ந்தவர்கள் சொல்கிறார்கள்.
 
பல வீட்டு உரிமையாளர்கள், தங்களின் வாடகைதாரர்களுடனான ஒப்பந்தங்களை முடித்துக் கொண்டார்கள். கொரோனாவினால், சொந்த பந்தங்கள் தங்கள் வீட்டுக்கு வந்து, தங்களின் குடும்பத்துடன் தங்குவதை விரும்பவில்லை என்கிறார் ஹீராநந்தனி. இந்த நடவடிக்கைகள், வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் நிம்மதியை பாதிக்கிறது. இதனால் தான் ரியல் எஸ்டேட்டின் தேவை அதிகரித்து இருக்கிறது என்கிறார் ஹீராநந்தனி.
 
இது போக, சிமெண்ட், ஸ்டீல், கட்டுமானம் போன்ற துறைகளின் வேகம், இந்திய பொருளாதாரத்தில் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்திய ஜிடிபியில் 7% பங்களிப்பைக் கொடுக்கிறது கட்டுமானத் துறை. விவசாயத்துக்குப் பிறகு, இந்தியாவின் கட்டுமான துறை தான் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளைக் கொடுக்கும் பெரிய துறை. அப்படிப்பட்ட கட்டுமானத் துறையில் காணப்படும் வளர்ச்சி, இந்தியப் பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும். ஆனால் கட்டுமானம், சிமெண்ட் போன்ற துறைகளே தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.
 
எதிர்காலத்தில், இந்தியாவில் நீடித்த பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்கிற முடிவுக்குச் செல்வதற்கு முன், பண்டிகை காலம் முடிந்த பின்பும், இது போலவே பொருளாதார நடவடிக்கைகள் மேம்படுமா என்பதைப் பார்க்க காத்திருக்கிறோம் என்கிறார் அதிதி.
 
பண்டிகை காலத்தில் செலவழித்தது எல்லாமே தேவை சார்ந்த பெண்ட் அப் டிமாண்ட் தான். அதையும் இந்த இரண்டாவது காலாண்டு ஜிடிபி தரவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளும். இந்திய பொருளாதாரத்தில் எந்த ஒரு முக்கியமான பொருளாதார மீட்சியும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மற்றும் கொரோனா தடுப்பூசி உடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.
 
ஆனால், இன்னும் சவால்கள் அப்படியே இருக்கின்றன. அரசு நிறைய செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. குறிப்பாக, பெரிய கட்டமைப்பு சார்ந்த திட்டங்களில், வேலை வாய்ப்புகளை உருவாக்க செலவழிக்க வேண்டி இருக்கிறது. அதிக வேலைகள் என்றால், அதிக வாங்கும் திறன் என்று பொருள். வேலைவாய்ப்புகள் இருந்தால் தான், நுகர்வு மேம்படும், அப்படியே மற்ற பொருளாதார சுழற்சிகளும் பழைய நிலைக்கு வரும்.
 
ஆனால், அரசாங்கத்திடமே போதுமான அளவுக்கு பணம் இல்லை என்பதால், அரசால் அதிகம் செலவழிக்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.