1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: வியாழன், 2 அக்டோபர் 2014 (18:16 IST)

அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம்

அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் 'உண்ணாவிரத மௌன அறப் போராட்டம்', இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது.

 
இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளே அமைந்துள்ள காந்தி சிலை முன்பாக நடைபெற்று வரும் இந்த ஒருநாள் போராட்டத்தில், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள். இதுவரை தமிழ்நாட்டிற்குள் மட்டும் நடைபெற்று வரும் இது போன்ற போராட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்த, அந்தக் கட்சியினர் திட்டமிட்டுள்ளாகக் கூறப்படும் சூழலில் இன்றைய இந்தப் போராட்டம் துவக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் போராட்டத்திற்கான ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அக்கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் தலைவர் வேணுகோபால் கூறும் போது, இது ஒரு அறப் போராட்டம் என்றும் அமைதியாக மட்டுமே தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
 
“தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன் கலந்துகொள்ளவில்லை”
 
அஇஅதிமுக மாநிலங்களைவை உறுப்பினர்களின் தலைவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களில் ஒருவரான மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. முக்கிய அலுவல் காரணமாக அவர்கள் டில்லிக்கு வர முடியாத சூழல் உருவாகியிருப்பதாகவும் அதனாலேயே அவர்கள் இதில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அக்கட்சியில் மொத்தமுள்ள 47 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 45 பேர் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களோடு முன்னாள் மக்களவை உறுப்பினர் முருகேசனும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
 
இவர்கள் அனைவரும் கோஷங்கள் எதுவும் எழுப்பாமல் அமைதியாக, காந்தி சிலை முன்பாக அமர்ந்துள்ள போதும், கையில் 'நீதி வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசக அட்டைகளை ஏந்தியுள்ளனர்.