வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. க‌ட்டுரைக‌ள்
Written By Webdunia

மனிதனுக்கு நிம்மதி அளிப்பது தூக்கம். இதனை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

ஜோதிடத்தைப் பொறுத்தவரை 12ஆம் இடம் சயன (உறக்கம்) ஸ்தானம். பழங்கால ஜோதிட நூல்களில் இதைப் பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக சுக்கிரன் 12இல் இருந்தால் அதிநவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறையில், ரம்பை, மேனகை, ஊர்வசி போன்ற பெண்களுடன் அவர் உறங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.

சந்திரன் 12இல் இருந்தால் வாசனைத் திரவியங்கள் சூழ்ந்த அறையில், இலவம்பஞ்சணையில் அந்த ஜாதகர் உறங்குவார். அதேபோல் அவர் உண்ணும் உணவும் தரமிக்கதாகவே இருக்கும்.

பொதுவாக 12க்கு உரிய கிரகம் சிறப்பாக இருந்தாலும் படுத்த உடனே தூக்கம் வரும். ஒருவேளை 12இல் சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகர் தனது கையை தலைக்கு கொடுத்து, காலைக் குறுக்கிக் கொண்டு உறங்குவார். நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் கிடைக்காது.

பொதுவாக ரயில்வே பாதைக்கு அருகேயுள்ள வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு இதுபோன்ற கிரக அமைப்பு பெரும்பாலும் காணப்படும். அவர்கள் உயர்ரக கட்டில், பஞ்சணையில் தூங்கினாலும் நிம்மதியான தூக்கம் வராது.

ராகு 12இல் இருந்தால் பாம்பு உள்ளிட்ட கொடிய ஊர்வனங்கள் உலாவக் கூடிய இடத்தில் அந்த ஜாதகர் உறங்க நேரிடும். மேலும் 6க்கு உரியவன் 12இல் இருந்து 12க்கு உரியவனுடன் சனி சேர்ந்தால் அந்த ஜாதகர் கொடிய பாம்புகள் சூழ்ந்த இடத்தில் அல்லது மரத்தில் தூங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. குரு 12இல் மறைந்தால் அரசுக்கு சொந்தமான இடங்கள், கட்டிடங்கள், கோயில்களில் அந்த ஜாதகர் உறங்குவார்.

ஒரு சிலருக்கு 12க்கு உரிய கிரகம் 12ஆம் இடத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும். அவர்களுக்கு நிம்மதியான, நிலையான உறக்கம் கிடைக்கும். இப்போதும் நாம் ஒரு சிலரைப் பற்றிக் குறிப்பிடும் போது, “என்ன வேலையாக இருந்தாலும் இரவு 9 மணிக்கு அவர் தூங்கி விடுவார்; அதேபோல் எவ்வளவு அசதியாக இருந்தாலும் காலை 5 மணிக்கு எழுந்து விடுவார” என்று கூறுவோம். அவர்களுடைய ஜாதகத்தில் 12க்கு உரியவர், 12இல் ஆட்சி பெற்றிருப்பார்.

மேலும் ஒரு சிலர் இரவு எத்தனை மணிக்கு படுத்தாலும், அதிகாலையிலேயே எழுந்துவிடும் தன்மை உடையவர்களாக இருப்பர். அவர்களுக்கு லக்னாதிபதி சிறப்பாக இருப்பதே காரணம். ஒரு சிலருக்கு 12இல் செவ்வாய் இருந்தால் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்குவார். இவர்களுக்கு வேறு எங்கு படுத்தாலும் தூக்கம் வராது.

லக்னாதிபதியும், 6க்கு உரியவரும் சேர்ந்திருந்தால் கோழித் தூக்கம்தான் கிடைக்கும். இதுபோன்ற அமைப்பை உடையவர்கள் தூக்கத்தில் சிறு சப்தம் கேட்டாலும் உடனடியாக விழித்துக் கொள்வர். மீண்டும் தூக்கம் பிடிப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்.

இதேபோல் லக்னாதிபதியுடன், 6, 12க்கு உரியவர்கள் சேர்ந்திருந்தால் கனவுத் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவருக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது.