வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 18 ஜூலை 2016 (09:04 IST)

தி.மு.க.வின் ஆசை வார்த்தைகள்: தே.மு.தி.க. வெளியிட்ட வாட்ஸ்அப் ஆடியோ

தே.மு.தி.க.,வில் இருந்து விலகி, மக்கள் தே.மு.தி.க.வை துவங்கி நேற்று தி.மு.க.,வில் இணைந்துள்ள, சந்திரகுமார் தன்னை ஆசை வார்த்தை கூறி தி.மு.க.,விற்கு அழைத்தார் என, தே.மு.தி.க. இலக்கிய அணி துணை செயலாளர் ராஜேந்திரநாத் வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்


 

 
தே.மு.தி.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்து உள்ளனர். தே.மு.தி.க. நிர்வாகிகளை ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க.வுக்கு வி.சி.சந்திரகுமார் அழைப்பதாக தே.மு.தி.க. குற்றம்சாட்டி வருகிறது. 
 
இதை நிரூபிக்கும் வகையில் தி.மு.க.வுக்கு தே.மு.தி.க. நிர்வாகி ஒருவரை வி.சி.சந்திரகுமாரும், எஸ்.ஆர்.பார்த்திபனும் அழைக்கும் ஆடியோ ஒன்றை தே.மு.தி.க. இலக்கிய அணி துணை செயலாளர் ராஜேந்திரநாத் வெளியிட்டுள்ளார்.
 
வி.சி.சந்திரகுமாரும், எஸ்.ஆர்.பார்த்திபனும் உரையாடுகிறார்கள். அந்த உரையாடலில் பேசியதாவது:-
 
எஸ்.ஆர்.பார்த்திபன்:- அடுத்தவாரம் வாங்க, தளபதி வீட்டில் பேசி உனக்கு பதவியை உறுதி செய்து விட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு வைப்போம். தி.மு.க.வுக்கு வந்தால் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. உன் வாழ்க்கையே மாறிவிடும். நாங்க அமைதியா இருந்து பல வேலையை செய்து கொண்டு இருக்கிறோம்.
 
ராஜேந்திரநாத்:- பார்ப்போம்... தி.மு.க. சார்பில் கண்ணன் என்பவர் என்னிடம் பேசினார். கட்சியில் பொறுப்பு வாங்கி தருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் நீங்க கேட்கிற வார்டு வாங்கி தருவதாக சொன்னார். என் செயல்பாட்டை பார்த்து எம்.எல்.ஏ. சீட்டும் வாங்கி தருவதாக சொன்னார்.
 
வி.சி.சந்திரகுமார்:- அதான் நான் சொன்னேன். நல்ல வாய்ப்பு. இதை ஏன் வேண்டாம் என்று நினைக்கிறீர்கள். என் கூடத்தான் வரவேண்டும் என்று நான் சொல்லவில்லை. எந்த இடத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறதோ? அந்த பக்கம் போங்க. அ.தி.மு.க. பக்கம் கூட போங்க. அங்க கூட மாபா இருக்காரு... நல்ல யோசித்து சொல்லுங்க.
 
இவ்வாறு அந்த உரையாடலில் பேசியுள்ளனர்.